அப்போஸ்தலர்களுடைய நடபடிகள்
ஆசிரியர்
மருத்துவராகிய லூக்கா, இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். அப்போஸ்தலர்களின் பல நிகழ்வுகளுக்கு லூக்கா ஒரு கண்கண்ட சாட்சியாக இருந்தார். பல பகுதிகளில் நாம் என்ற பதத்தைப் பயன்படுத்துவதிலிருந்து இது உறுதியாகிறது. (16: 10-17; 20: 5-21: 18; 27: 1-28: 16). பாரம்பரியமாக அவர் ஒரு சிறந்த மனிதராக கருதப்பட்டார், குறிப்பாக அவர் ஒரு சுவிசேஷகனாக இருந்தார்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 60-63 ன் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட இடங்கள் எவையெனில் எருசலேம், சமாரியா, லித்தா, யோப்பா, அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா, தெர்பை, பிலிப்பி, தெசலோனிக்கே, பெரோயா, ஏதென்ஸ், கொரிந்து, எபேசு, செசரியா, மெலித்தா, ரோம் ஆகியனவாகும்.
யாருக்காக எழுதப்பட்டது
தெயோபிலுவுக்கு லூக்கா எழுதினார் (அப்போஸ்தலர் 1: 1). துரதிருஷ்டவசமாக, தெயோபிலு யார் என்பது பற்றி அதிகம் அறியப்படவில்லை. லூக்காவின் ஆதரவாளராக இருந்திருக்கலாம் அல்லது தெயோபிலு என்ற பெயர், தேவனை நேசிப்பவர் என்று பொருள்படும் உலகளாவிய எல்லா கிறிஸ்தவர்களையும் குறிப்பதற்காக இருக்கலாம் என்று சில சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
எழுதப்பட்ட நோக்கம்
அப்போஸ்தலருடைய நடபடிகளின் நோக்கம் சபையின் பிறப்பு மற்றும் வளர்ச்சியைப் பற்றிய காரியங்களைக் கூறுவதாகும். இது யோவான் ஸ்நானகன், இயேசு மற்றும் சுவிசேஷங்களில் அவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் செய்தி ஆகியவற்றைத் தொடர்கிறது. பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியின் வருகையிலிருந்து கிறிஸ்தவம் பரவிய காரியங்களை இது நமக்குக் கொடுக்கிறது.
மையக் கருத்து
சுவிசேஷத்தின் பரவுதல்
பொருளடக்கம்
1. பரிசுத்த ஆவியானவரின் வாக்குத்தத்தம் — 1:1-26
2. பெந்தெகொஸ்தே: பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடு — 2:1-4
3. பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு அப்போஸ்தலர்கள் செய்த ஊழியமும், எருசலேம் சபைக்கு உண்டான உபவத்திரவங்களும் — 2:5-8:3
4. பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு அப்போஸ்தலர்கள் யூதேயாவிலும் சமாரியாவிலும் செய்த ஊழியங்கள் — 8:4-12:25
5. பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு அப்போஸ்தலர்கள் உலகின் கடைமுனைவரை செய்த ஊழியங்கள் — 8:4-12:25
அத்தியாயம் 1
ஆதித்திருச்சபையின் வரலாறு
48 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலர்களுக்குப் பரிசுத்த ஆவியானவராலே கட்டளையிட்டபின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை செய்தவைகள் மற்றும் போதித்தவைகள் எல்லாவற்றையும்குறித்து, முதலாம் புத்தகத்தை எழுதினேன். அவர் சிலுவையில் பாடுபட்டப்பின்பு, நாற்பது நாட்கள்வரை அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமாகி, தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை அவர்களோடு பேசி, அநேகம் தெளிவான ஆதாரங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். அன்றியும், அவர் அவர்களோடு கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாட்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். ஆகவே, நீங்கள் எருசலேமைவிட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய அதிகாரத்தில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார். இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வானத்திற்குமேல் எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்களுடைய கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. 10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, வெண்மையான உடையணிந்தவர்கள் இரண்டுபேர் அவர்கள் அருகே நின்று: 11 கலிலேய மக்களே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடமிருந்து வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்களுடைய கண்களுக்கு முன்பாக வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
மத்தியா தேர்ந்தெடுக்கப்படுதல்
12 அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகில் ஒரு ஓய்வுநாள் பயணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். 13 அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்தொலொமேயும், மத்தேயுவும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். 14 அங்கே இவர்களெல்லோரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரர்களோடுகூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். 15 அந்த நாட்களிலே, சீடர்கள் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் மத்தியிலே பேதுரு எழுந்து நின்று: 16 சகோதரர்களே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவர் தாவீதின் வாக்கினால் முன்சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது. 17 அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாக இருந்தான். 18 தவறான வழியின் வருமானத்தினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோனது. 19 இது எருசலேமிலுள்ள குடிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதினாலே அந்த நிலம் அவர்களுடைய மொழியிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என அழைக்கப்பட்டிருக்கிறது. 20 சங்கீத புத்தகத்திலே
அவன் குடியிருக்கும் வீடு அழியக்கடவது,
ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்;
அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறவேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது.
21 ஆதலால், யோவான் ஞானஸ்நானம் கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை, 22 அவர் நம்மிடத்தில் வாழ்ந்திருந்த காலங்களிலெல்லாம் எங்களோடு இருந்த மனிதர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான். 23 அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுபெயருள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி: 24 எல்லோருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்திற்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப் பணியிலும் பங்குபெறுவதற்காக, 25 இவ்விரண்டுபேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி; 26 பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான்.