அத்தியாயம் 4
தேவனுக்குப் பிரியமாக வாழ்வது
அன்றியும், சகோதரர்களே, நீங்கள் இந்தவிதமாக நடக்கவும், தேவனுக்குப் பிரியமாக இருக்கவும்வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாக முன்னேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவிற்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம். கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த வழிமுறைகளை அறிந்திருக்கிறீர்களே. நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசித்தனத்திற்கு விலகியிருந்து, தேவனை அறியாத மக்களைப்போல மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன்தன் சரீரத்தைப் பரிசுத்தமாகவும் மரியாதையாகவும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: இந்தக் காரியத்தில் ஒருவனும் தன் சகோதரனை ஏமாற்றாமலும் கெடுதல் செய்யாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்டக் காரியங்கள் எல்லாவற்றையும்குறித்துக் கர்த்தர் நீதியை நிலைநாட்டுகிறவராக இருக்கிறார். தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். ஆகவே, புறக்கணிக்கிறவன் மனிதர்களை அல்ல, தமது பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தருளின தேவனையே புறக்கணிக்கிறான். சகோதர அன்பைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருப்பதற்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்களே. 10 அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்கிலும் உள்ள சகோதரர்களெல்லோருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரர்களே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாகப் பெருகவும்; 11 அவிசுவாசிகளிடத்தில் ஒழுக்கமாக நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு, 12 நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாக இருக்கவிரும்பவும், உங்களுடைய சொந்த வேலைகளைப் பார்க்கவும், உங்களுடைய சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
கர்த்தருடைய வருகை
13 அன்றியும், சகோதரர்களே, மரித்துப்போனவர்களுக்காக நீங்கள் நம்பிக்கை இல்லாதவர்களான மற்றவர்களைப்போல துக்கப்பட்டு, அறிவில்லாமலிருக்க எனக்கு மனதில்லை. 14 இயேசுவானவர் மரித்து, பின்பு உயிரோடு எழுந்திருந்தாரென்று நம்புகிறோமே; அப்படியே இயேசுவிற்குள் மரித்தவர்களையும் தேவன் அவரோடு கொண்டுவருவார். 15 கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைவரைக்கும் உயிரோடிருக்கும் நாம் மரித்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. 16 ஏனென்றால், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவிற்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 17 பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடு ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாக எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம். 18 ஆகவே, இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.