அத்தியாயம் 10
சாலொமோனின் நீதிமொழிகள்
சாலொமோனின் நீதிமொழிகள்:
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்;
மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான்.
அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது;
நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.
யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்;
துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.
சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்;
சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்;
அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.
நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்;
கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்;
துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும்.
இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்;
அலப்புகிற மூடனோ விழுவான்.
உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்;
கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.
10 கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்;
அலப்புகிற மூடன் விழுவான்.
11 நீதிமானுடைய வாய் ஜீவஊற்று;
கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
12 பகை விரோதங்களை எழுப்பும்;
அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும்.
13 புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்;
மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.
14 ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்;
மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.
15 செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்;
ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும்.
16 நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும்,
துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.
17 புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்;
திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.
18 பகையை மறைக்கிறவன் பொய் உதடன்;
புறங்கூறுகிறவன் மதிகேடன்.
19 சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது;
தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
20 நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி;
துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
21 நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்;
மூடரோ மதியீனத்தினால் சாவார்கள்.
22 யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்;
அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார்.
23 தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு;
புத்திமானுக்கோ ஞானம் உண்டு.
24 துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்;
நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
25 சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்;
நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்;
26 பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ,
அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
27 யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்;
துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.
28 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்;
துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.
29 யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு,
அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம்.
30 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை;
துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை.
31 நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்;
மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.
32 நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்;
துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.