அத்தியாயம் 19
ஞானம் நன்மைகளின் ஊற்று
மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட,
உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன்.
ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல;
கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்;
என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும்.
செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்;
தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான்.
பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்;
பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்;
கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன்.
தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே,
எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்;
அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான்,
அவைகளோ வெறும் வார்த்தைகளே.
ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்;
புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்;
பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.
10 மூடனுக்குச் செல்வம் தகாது;
பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது.
11 மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்;
குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
12 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்;
அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும்.
13 மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்;
மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர்.
14 வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து;
புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு.
15 சோம்பல் தூங்கிவிழச்செய்யும்;
அசதியானவன் பட்டினியாக இருப்பான்.
16 கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்;
தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
17 ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்;
அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
18 நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி;
ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே.
19 கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்;
நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும்.
20 உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி,
ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
21 மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்;
ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும்.
22 நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு;
பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன்.
23 யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது;
அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்;
தீமை அவனை அணுகாது.
24 சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து,
அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான்.
25 பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்;
புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.
26 தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன்,
வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.
27 என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும்
போதகங்களை நீ கேட்காதே.
28 அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்;
துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.
29 பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும்,
மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.