சங்கீதம் 10
யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்?
துன்பம் நேரிடுகிற நேரங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால்
ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்;
அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான்,
பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான்.
துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்;
அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே.
அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்;
உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கின்றன;
தன்னுடைய எதிராளிகள் எல்லோர்மேலும் சீறுகிறான்.
நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை
என்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும்,
கொடுமையினாலும், நிறைந்திருக்கிறது;
அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.
கிராமங்களின் மறைவான இடங்களிலே மறைந்திருந்து,
மறைவான இடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்;
திக்கற்றவர்களைப் பிடிக்க அவனுடைய கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன.
தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்;
ஏழையைப் பிடிக்கப் மறைந்திருந்து, அவனைத் தன்னுடைய வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.
10 திக்கற்றவர்கள் தன்னுடைய பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.
11 தேவன் அதை மறந்தார் என்று அவர் தம்முடைய முகத்தை மறைத்து,
எப்போதும் அதைக் காணமாட்டார் என்றும்;
தன்னுடைய இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்.
12 யெகோவாவே, எழுந்தருளும்;
தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்;
ஏழைகளை மறக்காமலிரும்.
13 துன்மார்க்கன் தேவனை அசட்டைசெய்து,
நீர் கேட்டு விசாரிப்பதில்லை;
என்று தன்னுடைய இருதயத்தில் ஏன் சொல்லிக்கொள்ளவேண்டும்?
14 அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும்,
துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே;
நீர் பதிலளிப்பீர்;
ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்;
திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.
15 துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்;
அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும்.
16 யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்;
அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள்.
17 யெகோவாவே, ஏழைகளுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்;
அவர்கள் இருதயத்தை உறுதிப்படுத்துவீர்.
18 மண்ணான மனிதன் இனிப் பலவந்தம்செய்யத் தொடராமல்,
தேவனே நீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும்
ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய
உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.