சங்கீதம் 115
தாவீதின் பாடல்.
எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல,
உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும்.
அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே
என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்?
நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்;
தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார்.
அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும்,
மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.
அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது;
அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது;
அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது;
அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது;
தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும்,
அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு;
அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
10 ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்;
அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
11 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே,
யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
12 யெகோவா நம்மை நினைத்திருக்கிறார்,
அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்,
அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்.
13 யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும்,
சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார்.
14 யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார்.
15 வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
16 வானங்கள் யெகோவாவுடையவைகள்;
பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார்.
17 இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும்
யெகோவாவை துதிக்கமாட்டார்கள்.
18 நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும்
யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம்.
அல்லேலூயா.