சங்கீதம் 12
செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
காப்பாற்றும் யெகோவாவே, பக்தியுள்ளவன் அழிந்துபோகிறான்;
உண்மையுள்ளவர்கள் மனிதர்களில் இல்லை.
அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்;
கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள்.
வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும்,
பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக.
அவர்கள், எங்களுடைய நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை;
யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.
ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து,
அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி,
புடமிடப்பட்ட வெள்ளிக்கு இணையான
சுத்தசொற்களாக இருக்கின்றன.
யெகோவாவே, நீர் எங்களைக் காப்பாற்றி,
எங்களை *என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.
மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது,
துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றித்திரிவார்கள்.
* சங்கீதம் 12:7 12:7 அவர்களை