சங்கீதம் 128
ஆரோகண பாடல்.
யெகோவாவுக்குப் பயந்து,
அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
உன்னுடைய கைகளின் உழைப்பை நீ சாப்பிடுவாய்;
உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும்
திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்;
உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன்
இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான்.
யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்;
நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும்,
இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.