சங்கீதம் 18
இசைத் தலைவனுக்கு யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் யெகோவா அவனைத் தப்புவித்தபோது எழுதப்பட்ட பாடல்.
என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன்.
யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும்,
என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும்,
என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும்,
என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார்.
துதிக்குப் பாத்திரராகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்;
அதனால் என்னுடைய எதிரிகளுக்கு நீங்கலாகிப் பாதுகாக்கப்படுவேன்.
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; மாபெரும் அலைகள் என்னைப் பயப்படுத்தினது.
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன;
மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன.
எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்,
என் தேவனை நோக்கி சத்தமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார்,
என்னுடைய கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய்,
அவர் காதுகளில் விழுந்தது.
அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது,
மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன.
அவர் மூக்கிலிருந்து புகை எழும்பிற்று,
அவர் வாயிலிருந்து எரியும் நெருப்பு புறப்பட்டது;
அதனால் தழல் மூண்டது.
வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்;
அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
10 கேருபீன்மேல்* ஏறி வேகமாகச் சென்றார்;
காற்றின் இறக்கைகளைக் கொண்டு பறந்தார்.
11 இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்;
தண்ணீர் நிறைந்த கறுத்த மழைமேகங்களையும் தம்மை சூழ்ந்திருக்கும் கூடாரமாக்கினார்.
12 அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள்,
கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன.
13 யெகோவா வானங்களிலே குமுறினார்,
உன்னதமான தேவனானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்;
கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன.
14 தம்முடைய அம்புகளை எய்து,
அவர்களைச் சிதறடித்தார்;
மின்னல்களைப் பயன்படுத்தி, அவர்களைக் கலங்கச்செய்தார்.
15 அப்பொழுது யெகோவாவே,
உம்முடைய கண்டிப்பினாலும்
உம்முடைய மூக்கின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன,
உலகின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன.
16 உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து,
பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிட்டார்.
17 என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும்
என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
18 என்னுடைய ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்;
யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார்.
19 என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால்,
விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து,
என்னைத் தப்புவித்தார்.
20 யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்;
என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார்.
21 ஏனெனில் யெகோவாவுடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்;
நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாக விலகினதில்லை.
22 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன;
அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.
23 உன்னத தேவனுக்கு முன்பாக நான் உத்தமனாக இருந்து,
என்னுடைய பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
24 ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும்,
தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற
என்னுடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.
25 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும்,
உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;
26 புனிதனுக்கு நீர் புனிதராகவும்,
மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
27 தேவனே நீர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவீர்;
மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
28 தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்;
என் தேவனாகிய யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குவார்.
29 உம்மாலே ஒரு சேனையை என் கால்களால் மிதிப்பேன்;
என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
30 தேவனுடைய வழி உத்தமமானது;
யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது;
தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார்.
31 யெகோவாவை தவிர தேவன் யார்?
நம்முடைய தேவன் இல்லாமல் கன்மலையும் யார்?
32 என்னைப் பலத்தால் இடைகட்டி,
என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
33 அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி,
உயர்வான இடங்களில் என்னை நிறுத்துகிறார்.
34 வெண்கல வில்லும் என்னுடைய கைகளால் வளையும்படி,
என்னுடைய கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
35 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்;
உம்முடைய வலதுகை என்னைத் தாங்குகிறது;
உம்முடைய கருணை என்னைப் பெரியவனாக்கும்.
36 என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
37 என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து,
அவர்களைப் பிடித்தேன்;
அவர்களை அழிக்கும் வரைக்கும் நான் திரும்பவில்லை.
38 அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன்.
39 போருக்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி,
என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கச்செய்தீர்.
40 நான் என்னுடைய எதிரியை அழிக்கும்படி,
என்னுடைய எதிரிகளின் கழுத்தை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
41 அவர்கள் கூப்பிடுகிறார்கள்,
அவர்களைக் காப்பாற்றுகிறவர்கள் ஒருவருமில்லை;
யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்,
அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை.
42 நான் அவர்களைக் காற்றின்திசையிலே பறக்கிற தூசியாக இடித்து,
தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.
43 மக்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர்,
தேசங்களுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்;
நான் அறியாத மக்கள் எனக்கு சேவைசெய்கிறார்கள்.
44 அவர்கள் என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்;
அந்நியரும் என்னிடம் கூனிக்குறுகுகிறார்கள்.
45 அந்நியர் மனமடிந்து, தங்களுடைய அரண்களிலிருந்து தத்தளிப்பாகப் புறப்படுகிறார்கள்.
46 யெகோவா உயிருள்ளவர்;
என்னுடைய கன்மலையானவர் துதிக்கப்படுவாராக;
என்னுடைய இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.
47 அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன்.
அவர் மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர்.
48 அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்;
எனக்கு விரோதமாக எழும்புகிறவர்களைவிட என்னை நீர் உயர்த்தி,
கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
49 இதற்காக யெகோவாவே, தேசங்களுக்குள்ளே உம்மைத் துதித்து,
உம்முடைய பெயருக்கு பாட்டு பாடுவேன்.
50 தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து,
தாம் அபிஷேகம்செய்த தாவீதிற்கும்
அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.
* சங்கீதம் 18:10 18:10 கேருபீன்கள், யெகோவாவின் சிங்காசனத்தை சுற்றி பாதுக்காக்கும் பரலோக இறக்கைகளுடைய சிருஷ்டிகள் சங்கீதம் 18:13 18:13 சில கையெழுத்துப்பிரதிகளில் காணப்படவில்லை