சங்கீதம் 25
தாவீதின் பாடல்.
யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன்,
நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்;
என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும்.
உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்;
காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக.
யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்;
உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.
உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்;
நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன்,
உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும்,
அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது.
என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்;
யெகோவாவே, உம்முடைய தயவிற்காக என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.
யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்;
ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.
சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி,
சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.
10 யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு,
அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை.
11 யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது;
உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும்.
12 யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ
அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
13 அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்;
அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும்.
14 யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது;
அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.
15 என்னுடைய கண்கள் எப்போதும் யெகோவாவை நோக்கிக்கொண்டிருக்கின்றன;
அவரே என்னுடைய கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.
16 என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்;
நான் தனித்தவனும், பாதிக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.
17 என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன;
என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும்.
18 என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து,
என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.
19 என்னுடைய எதிரிகளைப் பாரும்;
அவர்கள் பெருகியிருந்து, கொடூர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள்.
20 என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்;
நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன்.
21 உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்;
நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
22 தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும்.