சங்கீதம் 3
தன் மகனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாடல்.
யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்!
எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர்.
தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று,
என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா)
ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும்,
என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர்.
நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்;
அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்கு பதில் கொடுத்தார். (சேலா)
நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்;
யெகோவா என்னைத் தாங்குகிறார்.
எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும்
நான் பயப்படமாட்டேன்.
யெகோவாவே, எழுந்தருளும்;
என் தேவனே, என்னை காப்பாற்றும்.
நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து,
துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
ஜெயம் யெகோவாவுடையது;
தேவனே உம்முடைய ஆசீர்வாதம்
உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா).