சங்கீதம் 56
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான்,
நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.
என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்;
உன்னதமானவரே, எனக்கு விரோதமாக அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர்.
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன்,
நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்?
எப்பொழுதும் என்னுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்;
எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாக இருக்கிறது.
அவர்கள் ஒன்றாகக் கூடி, மறைந்திருக்கிறார்கள்;
என்னுடைய உயிரை வாங்க விரும்பி, என்னுடைய காலடிகளைப் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ?
தேவனே, கோபங்கொண்டு மக்களைக் கீழே தள்ளும்.
என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்;
என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்;
அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்;
தேவன் என்னுடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.
10 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்;
யெகோவாவை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.
11 தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்;
மனிதன் எனக்கு என்ன செய்வான்?
12 தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது;
உமக்கு நன்றிகளைச் செலுத்துவேன்.
13 நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி,
நீர் என்னுடைய ஆத்துமாவை மரணத்திற்கும் என்னுடைய கால்களை இடறலுக்கும் தப்புவியாமல் இருப்பீரோ?