சங்கீதம் 63
யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய பாடல்.
தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்;
வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது,
என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது.
இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து,
உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
உயிரைவிட உமது கிருபை நல்லது;
என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும்.
என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து,
உமது பெயரை சொல்லிக் கையை உயர்த்துவேன்.
நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்;
என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது,
இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
நீர் எனக்குத் துணையாக இருந்ததினால்,
உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன்.
என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது;
உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்களோ,
பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.
10 அவர்கள் வாளால் விழுவார்கள்;
நரிகளுக்கு இரையாவார்கள்.
11 ராஜாவோ தேவனில் சந்தோஷப்படுவார்;
தேவன் பேரில் சத்தியம்செய்கிறவர்கள்
அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்;
பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.