சங்கீதம் 87
கோராகின் மகன்களுடைய பாடல்.
அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது.
யெகோவா யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட
சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார்.
தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா)
என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்;
இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும்,
எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;
சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்;
உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார்.
யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது,
இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா)
எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று
பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள்.