சங்கீதம் 88
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல்.
என்னுடைய இரட்சிப்பின் தேவனாகிய யெகோவாவே,
இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக;
என்னுடைய கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.
என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது;
என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது.
நான் குழியில் இறங்குகிறவர்களோடு நினைக்கப்பட்டு,
பெலனற்ற மனிதனைப்போல ஆனேன்.
மரித்தவர்களில் ஒருவனைப்போல் தள்ளப்பட்டிருக்கிறேன்;
நீர் இனி ஒருபோதும் நினையாதபடி,
உமது கையால் அறுக்கப்பட்டுபோய்க் கல்லறைகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன்.
என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.
உம்முடைய கோபம் என்னை அமிழ்த்துகிறது;
உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா)
எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி,
அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்;
நான் வெளியேற முடியாதபடி அடைபட்டிருக்கிறேன்.
துக்கத்தினால் என்னுடைய கண் தொய்ந்துபோனது;
யெகோவாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு,
உமக்கு நேராக என்னுடைய கைகளை விரிக்கிறேன்.
10 இறந்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ?
செத்துப்போன வீரர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா)
11 கல்லறைக்குழியில் உமது கிருபையும்,
அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?
12 இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது
நீதியும் அறியப்படுமோ?
13 நானோ யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
காலையிலே என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.
14 யெகோவாவே, ஏன் என்னுடைய ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்?
ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?
15 சிறுவயதுமுதல் நான் பாதிக்கப்பட்டவனும் இறந்துபோகிறவனுமாக இருக்கிறேன்;
உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது,
நான் மனங்கலங்குகிறேன்.
16 உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது;
உம்முடைய பயங்கரங்கள் என்னை அழிக்கிறது.
17 அவைகள் நாள்தோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து,
ஒன்றாக என்னை வளைந்துகொள்ளுகிறது.
18 நண்பனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்;
எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள்.