சங்கீதம் 98
பாடல்.
யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்;
அவருடைய வலது கரமும்,
அவருடைய பரிசுத்த கரமும், வெற்றியை உண்டாக்கினது.
யெகோவா தமது இரட்சிப்பை வெளிப்படுத்தி,
தமது நீதியை தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கச்செய்தார்.
அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்;
பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய வெற்றியைக் கண்டது.
பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும்
யெகோவாவை நோக்கி ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
சுரமண்டலத்தால் யெகோவாவைப் புகழ்ந்துபாடுங்கள்,
சுரமண்டலத்தாலும் பாடலின் சத்தத்தாலும் அவரைப் புகழ்ந்துபாடுங்கள்.
யெகோவாவாகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும்
எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்.
கடலும் அதின் நிறைவும், பூமியும் அதில் உள்ளவர்களும் முழங்குவதாக.
யெகோவாவுக்கு முன்பாக ஆறுகள் கைதட்டி,
மலைகள் ஒன்றாக கெம்பீரித்துப் பாடட்டும்.
அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;
உலகத்தை நீதியோடும்
மக்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.