சங்கீதம் 99
யெகோவா ராஜரிகம்செய்கிறார்,
மக்கள் தத்தளிப்பார்களாக;
அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார்,
பூமி அசைவதாக.
யெகோவா சீயோனில் பெரியவர்,
அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர்.
மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக;
அது பரிசுத்தமுள்ளது.
ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது,
தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்;
நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.
நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,
அவர் பாதத்தைப் பணியுங்கள்;
அவர் பரிசுத்தமுள்ளவர்.
அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும்,
அவர் பெயரைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும்,
யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;
அவர் அவர்களுக்கு மறுஉத்திரவு அருளினார்.
மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்;
அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும்
அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.
எங்களுடைய தேவனாகிய யெகோவாவே,
நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்;
நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும்,
அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர்.
நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,
அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்;
நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர்.