அத்தியாயம் 10
தேவதூதனும் புத்தகமும்
பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; மேகம் அவனைச் சுற்றியிருந்தது, அவனுடைய தலையின்மேல் வானவில் இருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினித் தூண்களைப்போலவும் இருந்தது. திறக்கப்பட்ட ஒரு சிறிய புத்தகம் அவனுடைய கையில் இருந்தது; தன் வலது பாதத்தைக் கடலின்மேலும், தன் இடதுபாதத்தை பூமியின்மேலும் வைத்து, சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல அதிக சத்தமாக ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. அந்த ஏழு இடிகளும் தங்களுடைய சத்தங்களை முழங்கினபோது நான் எழுதவேண்டுமென்று இருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் அவைகள் இரகசியமாக இருக்க முத்திரைபோடு என்று வானத்திலிருந்து சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன். கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் பார்த்த அந்த தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி: இனி காலம் தாமதம் ஆகாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு நற்செய்தியாக அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவ இரகசியம் நிறைவேறும் என்று, வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். நான் வானத்தில் இருந்து கேட்ட சத்தம் மீண்டும் என்னோடு பேசி: கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையில் இருக்கும் திறக்கப்பட்ட சிறிய புத்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல, நான் தூதனிடம்போய்: அந்தச் சிறிய புத்தகத்தை எனக்குத் தரவேண்டும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிச் சாப்பிடு; இது உன் வயிற்றுக்குக் கசப்பாக இருக்கும். ஆனால் உன் வாய்க்கு இது தேனைப்போலச் சுவையாக இருக்கும் என்றான். 10 நான் அந்தச் சிறிய புத்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைச் சாப்பிட்டேன்; என் வாய்க்கு அது தேனைப்போல இனிமையாக இருந்தது; நான் அதைச் சாப்பிட்டவுடனே என் வயிறு கசப்பானது. 11 அப்பொழுது அவன் என்னைப் பார்த்து: நீ மீண்டும் அநேக மக்களையும், தேசங்களையும், பல மொழிக்காரர்களையும், ராஜாக்களையும்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்றான்.