1 சாமுவேல்
ஆசிரியர்
இந்த புத்தகத்தில் ஆசிரியரைப்பற்றி எதுவும் சரியாக குறிப்பிடவில்லை. ஆனாலும் சாமுவேல் தான் எழுதியிருக்க வேண்டும். 1. சாமுவேல் 1:1-24:22 வரை சாமுவேல் தீர்க்கதரிசியினுடைய வாழ்க்கையை இந்நூல் விவரித்து காட்டுகிறது. இதை தீர்க்கத்தரிசி சாமுவேல் தான் எழுதியிருக்கிறான் என்று கருதப்படுகிறது. தீர்க்கதரிசி நாதன் என்பவரும் காத் என்பவரும் இதில் சிலப் பகுதிகளை எழிதியுள்ளர்கள் என்று கருதப்படுகிறது. (1. நாளாகமம் 29:29).
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கி மு. 1,050 க்கும் 722 கி மு. க்கும். இடையில் எழுதப்பட்டது. 1. சாமு. 11:8; 17:52; 18:16; 2. சாமு. 5:5; 11:11; 12:8; 19:42-43; 24:1, 9.
யாருக்காக எழுதப்பட்டது
தாவீதின் அரசாட்சியின் தெய்வீக நோக்கத்தையும் தேவையையும் இரண்டாய் பிரிக்கப்பட்ட இஸ்ரவேலர்களும் யூதா ஜனங்களும் அறிந்து கொள்ளத்தக்கதாக அவர்களுக்கும் நமக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தேவனால் கானான் தேசத்தில் நியாயதிபதிகளின் வாயிலாக வழி நடத்தப்பட்ட இஸ்ரவேலர்கள், மன்னர் ஆட்சியின் கீழ் வந்ததையும் சாமுவேல் கடைசி நியாயதிபதியாக இருந்தான். சவுல் தாவீது ஆகிய இரண்டு நபர்களை இராஜாக்களாக அபிஷேகம் செய்தான்.
மையக் கருத்து
மாற்றம்
பொருளடக்கம்
1. சாமுவேலின் வாழ்க்கையும். ஊழியமும் — 1:1-8:22
2. இஸ்ரவேலின் முதல் இராஜவான சவுலின் வாழ்க்கை — 9:1-12:25
3. இராஜவான சவுலின் தோல்விகள் — 13:1-15:35
4. தாவீதின் வாழ்க்கை — 16:1-20:42
5. இஸ்ரவேலின் இராஜாவாக தாவீதின் அனுபவங்கள் — 21:1-31:13
அத்தியாயம் 1
எல்க்கானாவும் அவனது குடும்பமும்
எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா* என்று பெயர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் மகனான எலிகூவின் மகனான எரோகாமின் மகன். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பெயர் அன்னாள், மற்றவள் பெயர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. அந்த மனிதன் சீலோவிலே சேனைகளின் யெகோவாவை தொழுதுகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே யெகோவாவின் ஆசாரியரான ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும், பினெகாசும் இருந்தார்கள். அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே அவன் தன்னுடைய மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லா மகன்களுக்கும் மகள்களுக்கும் பங்குபோட்டுக் கொடுப்பான். அன்னாளை நேசித்ததினால், அவளுக்கு இரண்டு பங்கு கொடுப்பான்§
; யெகோவாவோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார்.
யெகோவா அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளுக்கு மிகவும் எரிச்சலுண்டாக்குவாள். அவள் யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போகும்போது, அவன் ஒவ்வொரு வருடமும் அப்படியே செய்வான்; இவள் அன்னாளை மனவேதனைப்படுத்துவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். அவளுடைய கணவனான எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்து மகன்களைவிட நான் உனக்கு மேலானவன் அல்லவா? என்றான்.
அன்னாளின் ஜெபம்
சீலோவிலே அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்தாள்; ஆசாரியனான ஏலி யெகோவாவுடைய ஆலயத்தின் வாசற்கதவருகில் ஒரு இருக்கையின்மேல் உட்கார்ந்திருந்தான். 10 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: 11 சேனைகளின் யெகோவாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறக்காமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் நான் அவனைக் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை செய்தாள். 12 அவள் யெகோவாவுக்கு முன்பாக அதிகநேரம் விண்ணப்பம்செய்கிறபோது, ஏலி அவளுடைய வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான். 13 அன்னாள் தன்னுடைய இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மட்டும் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கவில்லை; ஆகவே, அவள் குடிவெறியில் இருக்கிறாள் என்று ஏலி நினைத்து, 14 அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் குடிவெறியில் இருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான். 15 அதற்கு அன்னாள் பதிலாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனவேதனையுள்ள பெண்; நான் திராட்சை ரசமோ, மதுவோ குடிக்கவில்லை; நான் யெகோவாவுக்கு முன்பாக என்னுடைய இருதயத்தை ஊற்றிவிட்டேன். 16 உம்முடைய அடிமையை துன்மார்க்கத்தின் பெண்ணாக நினைக்கவேண்டாம்; மிகுதியான துன்பத்தினாலும், துயரத்தினாலும் இந்த நேரம்வரை விண்ணப்பம்செய்தேன் என்றாள். 17 அதற்கு ஏலி சமாதானத்துடன் போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். 18 அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயவு கிடைக்கட்டும் என்றாள்; பின்பு அந்த பெண் புறப்பட்டுப்போய் சாப்பிட்டாள்; அதன்பின்பு அவள் துக்கமுகமாக இருக்கவில்லை.
சாமுவேலின் பிறப்பும் பொருத்தனையும்
19 அவர்கள் அதிகாலையில் எழுந்து, யெகோவாவைத் தொழுதுகொண்டு, ராமாவிலிருக்கிற தங்களுடைய வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளுடன் இணைந்தான்; யெகோவா அவளை நினைத்தார். 20 சிலநாட்கள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்று, யெகோவாவிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல்* என்று பெயரிட்டாள். 21 எல்க்கானா என்பவன் யெகோவாவுக்கு வருடந்தோறும் செலுத்தும் பலியையும் தன்னுடைய பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன்னுடைய வீட்டார் அனைவரோடும் போனான். 22 அன்னாள் அவர்களுடன் போகவில்லை; அவள்: பிள்ளை பால்குடிப்பதை மறந்தபின்பு, அவன் யெகோவாவுக்கு முன்பாக காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய்விடுவேன் என்று தன்னுடைய கணவனிடம் சொன்னாள்.
யெகோவாவுடைய ஆலயத்தில் சாமுவேல்
23 அப்பொழுது அவளுடைய கணவனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன்னுடைய விருப்பத்தின்படி செய்து, அவனை பால் மறக்கச்செய்யும்வரை இரு; யெகோவா தம்முடைய வார்த்தையைமட்டும் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்தப் பெண் தன்னுடைய பிள்ளையைப் பால் மறக்கச்செய்யும்வரைக்கும் பாலூட்டி வளர்த்தாள். 24 அவள் அவனைப் பால்மறக்கச் செய்தபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால்§ மாவையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாக இருந்தான். 25 அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள். 26 அப்பொழுது அவள்: என்னுடைய ஆண்டவனே, இங்கே உம்முடைய அருகிலே நின்று யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்த பெண் நான்தான் என்று என்னுடைய ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். 27 இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்செய்தேன்; நான் யெகோவாவிடத்தில் கேட்ட என்னுடைய விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார். 28 எனவே, அவன் யெகோவாவெக்கென்று கேட்கப்பட்டதால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் அவனைக் யெகோவாவுக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே யெகோவாவைத் தொழுதுகொண்டான்.
* அத்தியாயம் 1:1 1:1 தேவன் என்னை உண்டாக்கினார் அத்தியாயம் 1:2 1:2 கிருபை பெற்றவள் அத்தியாயம் 1:2 1:2 முத்து, விலை உயர்ந்த கல், 10 வருடத்திற்கு பிறகு திருமணம் செய்யப்பட்டவள் § அத்தியாயம் 1:5 1:5 அன்னாளை நேசித்தாலும் அவளுக்கு ஒரு பங்கு தான் கொடுப்பான் * அத்தியாயம் 1:20 1:20 தேவன் பதில் அளித்தார், அத்தியாயம் 1:22 1:22 அவன் வாழ்நாளெல்லாம் நசரேயனாக இருக்கும்படி அவனை ஆலயத்தில் விட்டுவிடுவேன்; அத்தியாயம் 1:24 1:24 3 வயது காளைகளையும் § அத்தியாயம் 1:24 1:24 ஏறக்குறைய 10. கிலோ