2 சாமுவேல்
ஆசிரியர்
இந்த 2. சாமுவேல் புத்தகத்தில் ஆசிரியரைப்பற்றி எதுவும் சரியாக குறிப்பிடவில்லை. தீர்க்கத்தரிசி சாமுவேல் மரித்துவிட்டதால் இவர் எழுதியிருக்கமுடியாது. காத் நாத்தான் என்ற தீர்க்கதரிசிகள், ஆசாரியனான அபியத்தார் ஆகியவர்கள் எழுதியிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. ஆதியிலே 1 சாமுவேலும். 2 சாமுவேலும் ஒரே புத்தகமாக இருந்தது. கிரேக்க மொழியில் மொழிப்பெயர்த்தவர்கள் இதை இரண்டாகப் பிரித்தார்கள். ஆகையால் 1 சாமுவேல் சவுல் இராஜாவின் மரணத்துடன் முடிகிறது. 2. சாமுவேல் தாவீதின் அரசாட்சியுடன் தொடங்குகிறது. முதலாவதாக தாவீது யூதா கோத்திரத்தின் மீது இராஜாவாக அபிஷேகிக்கப்பட்டான் பிறகு இஸ்ரவேல் முழுவதும் இராஜாவாக்கப்பட்டான்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 1050 க்கும் 722 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
பாபிலோனியா சிறையிருப்புக் காலத்தில் வேதவல்லுனர்களால் தொகுக்கப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
தாவீது சாலோமோன் காலத்திலும் வாழ்ந்தவர்களுக்கும் பின்வரும் சந்ததிகளுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
இந்த புத்தகம் தாவீது இராஜாவின் ஆட்சியை பதிவு செய்கிறது. தாவீதின் உடன்படிக்கையை சரித்திரபூர்வமாக பதிவுசெய்கிறது. தாவீது எருசலேமை இஸ்ரவேலின் அரசியலின் மையமாகவும் ஆராதனைகளின் மையமாகவும் ஏற்படுத்தினான். (2 சாமு 5:6-12; 6:1-17). யெகோவாவின் வார்த்தைகளும் (2 சாமு: 7:4-16). (2 சாமு: 23:1-7). தாவீதின் வார்த்தைகளும் தேவன் கொடுத்த இராஜ்ஜியத்தின் முக்கியத்தை அழுத்தி சொல்கிறது. தீர்க்கதரிசனமாக மேசியாவின் ஆயிர வருட அரசாட்சியையும் சுட்டிக்காட்டுகிறது.
மையக் கருத்து
ஒருங்கிணைத்தல்
பொருளடக்கம்
1. தாவீதின் இராஜ்ஜியத்தினுடைய ஏற்றம் — 1:1-10:19
2. தாவீதின் இராஜ்ஜியத்தினுடைய வீழ்ச்சி — 11:1-20:26
3. பிற்சேர்க்கை — 21:1-24:25
அத்தியாயம் 1
சவுலின் மரணத்தை தாவீது அறிதல்
சவுல் இறந்தபின்பு, தாவீது அமலேக்கியர்களை முறியடித்து, சிக்லாகு பட்டணத்துக்குத் திரும்பிவந்து, இரண்டு நாட்கள் அங்கே இருந்த பின்பு, மூன்றாம் நாளிலே ஒரு மனிதன் சவுலின் முகாமிலிருந்து புறப்பட்டு, தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தன்னுடைய தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, தாவீதிடம் வந்து, தரையிலே விழுந்து வணங்கினான். தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு, அவன்: இஸ்ரவேலின் இராணுவ முகாமிலிருந்து தப்பிவந்தேன் என்றான். தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: மக்கள் யுத்தத்தைவிட்டு ஓடிப்போனார்கள்; மக்களில் அநேகம் பேர் காயப்பட்டு இறந்துபோனார்கள்; சவுலும் அவருடைய மகனான யோனத்தானும் இறந்தார்கள் என்றான். சவுலும் அவருடைய மகனான யோனத்தானும் இறந்துபோனது உனக்கு எப்படித் தெரியும் என்று தாவீது தனக்கு அதை அறிவித்த வாலிபனிடம் கேட்டதற்கு, அந்த வாலிபன்: நான் தற்செயலாகக் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்துகிடந்தார்; இரதங்களும் குதிரை வீரர்களும் அவரைப் பின்தொடர்ந்து நெருங்கினார்கள். அவர் திரும்பிப் பார்த்து: என்னைக் கண்டு கூப்பிட்டார்; அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன். அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன். அவர் என்னை நோக்கி: நீ என் அருகில் வந்து நின்று, என்னைக் கொன்றுபோடு; இன்னும், என்னுடைய உயிர் முழுவதும் போகாததால் எனக்கு வேதனையாக இருக்கிறது என்றார். 10 அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவருக்கு அருகில் போய் நின்று, அவரைக் கொன்றுபோட்டேன்; பின்பு அவருடைய தலையின்மேல் இருந்த கிரீடத்தையும் அவருடைய கையில் இருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு, அவைகளை இங்கே என்னுடைய ஆண்டவனிடம் கொண்டுவந்தேன் என்றான். 11 அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த எல்லா மனிதர்களும் தங்களுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, 12 சவுலும், அவனுடைய மகனான யோனத்தானும், யெகோவாவுடைய மக்களும், இஸ்ரவேல் குடும்பத்தார்களும், பட்டயத்தால் மரித்து போனதால் புலம்பி அழுது மாலைவரை உபவாசத்தோடு இருந்தார்கள். 13 தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய தேசத்தானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான். 14 தாவீது அவனை நோக்கி: யெகோவாவினால் அபிஷேகம் செய்தவரைக் கொன்றுபோடும்படி நீ உன்னுடைய கையை நீட்டப் பயப்படாமல் போனது என்ன என்று சொல்லி, 15 வாலிபர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, நீ அவன் அருகே போய், அவனைக் கொன்றுபோடு என்றான்; அவன் அமலேக்கியனை வெட்டினான்; அவன் இறந்தான். 16 தாவீது அவனைப் பார்த்து: உன்னுடைய இரத்தப்பழி உன்னுடைய தலையின்மேல் இருக்கட்டும்; யெகோவா அபிஷேகம் செய்தவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன்னுடைய வாயே உனக்கு விரோதமான சாட்சி சொன்னது என்றான்.
தாவீதின் புலம்பல்
17 தாவீது சவுலையும் அவனது மகன் யோனத்தானையும்குறித்து, துயரப்பாடலைப் பாடினான். 18 (வில்வித்தையை யூதாவின் மகன்களுக்குக் கற்றுக்கொடுக்கும்படிக் கட்டளையிட்டான்; அது யாசேரின் புத்தகத்தில்* 1:18 வேதாகமத்தில் இந்த புத்தகம் குறிக்கப்பட்டிருக்கிறது
இது யூதர்களின் இப்போது கிடைக்க கூடிய ஒரு சரித்திர புத்தகம் இதில் பழங்காலத்து யுத்தத்தின் துயரப்பாடல்களின் சேகரிப்பாகும்
யோசுவா 10:13,
எழுதியிருக்கிறது) அவன் பாடின துயரப்பாடலாவது.
19 இஸ்ரவேலின் புகழ்பெற்ற தலைவர்கள்,
உயர்ந்த மலைகளில் இறந்து போனர்கள்;
பலசாலிகள் கொலைசெய்யப்பட்டுபோனார்கள்.
20 பெலிஸ்தர்களின் மகள்கள் சந்தோஷப்படாதபடியும்,
விருத்தசேதனம் இல்லாதவர்களின் மகள்கள் கொண்டாடாதபடியும்,
அதைக் காத் பட்டணத்தில் அறிவிக்காமலும் அஸ்கலோனின் வீதிகளில் தெரிவிக்காமலும் இருங்கள்.
21 கில்போவா மலைகளே,
உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும்,
காணிக்கைக்கு ஏற்ற பலன் தரும் வயல்கள் இருக்காமலும் போகட்டும்;
அங்கே பெலசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம் செய்யப்படாதவர்போல அவருடைய கேடகமும் அவமதிக்கப்பட்டதே.
22 கொலைசெய்யப்பட்டவர்களின் இரத்தத்தைக் குடிக்காமலும்,
பெலசாலிகளின் கொழுப்பை சாப்பிடாமலும், யோனத்தானுடைய வில் பின்வாங்கினதில்லை;
சவுலின் பட்டயம் வெறுமையாகத் திரும்பினதில்லை.
23 உயிரோடு இருக்கும்போது சவுலும் யோனத்தானும் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டி மகிழ்ச்சியாக இருந்தார்கள்;
மரணத்திலும் பிரிந்துபோனதில்லை; கழுகுகளைவிட வேகமும்,
சிங்கங்களைவிட பலமும் உள்ளவர்களாக இருந்தார்கள்.
24 இஸ்ரவேலின் மகள்களே, உங்களுக்கு சிவந்த ஆடையை நேர்த்தியாக அணிவித்து,
உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைப் பதித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்.
25 போர்க்களத்தில் பெலசாலிகள் விழுந்தார்களே.
யோனத்தானே, உயரமான இடங்களில் இறந்துபோனாயே.
26 என்னுடைய சகோதரனான யோனத்தானே,
உனக்காக நான் துயரப்படுகிறேன்;
நீ எனக்கு மிகவும் இன்பமாக இருந்தாய்;
உன்னுடைய அன்பு ஆச்சரியமாக இருந்தது;
பெண்களின் அன்பை விட அதிகமாக இருந்தது.
27 பெலசாலி வீரர்கள்கள் விழுந்துபோனார்களே;
யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோனதே” என்று பாடினான்.

*அத்தியாயம் 1:18 1:18 வேதாகமத்தில் இந்த புத்தகம் குறிக்கப்பட்டிருக்கிறது இது யூதர்களின் இப்போது கிடைக்க கூடிய ஒரு சரித்திர புத்தகம் இதில் பழங்காலத்து யுத்தத்தின் துயரப்பாடல்களின் சேகரிப்பாகும் யோசுவா 10:13,