பிலிப்பியர்
ஆசிரியர்
பவுல் இதை எழுதினதாகக் கூறுகிறார் (1: 1) மற்றும் மொழி, பாணி, மற்றும் வரலாற்று உண்மைகளின் அனைத்து உள் குணாதிசயங்கள் ஆகியவை இதை உறுதிப்படுத்துகிறது. ஆரம்பகால சபை, பவுல் ஆசிரியர் என்றும் அதிகாரம் பற்றியும் தொடர்ந்து பேசுகிறது. பிலிப்பியருக்கு எழுதிய நிருபம் கிறிஸ்துவின் சிந்தையை வெளிப்படுத்துகிறது (2: 1-11). பிலிப்பியர் நிருபத்தை எழுதும்போது பவுல் கைதியாக இருந்தபோதிலும் அவர் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தார். பிலிப்பியர் நிருபம் நமக்கு, துன்பங்கள் மற்றும் பாடுகளுக்கு நடுவில் இருந்தாலும் கிறிஸ்தவர்கள் சந்தோஷமாக இருக்க முடியுமென கற்றுக்கொடுக்கிறது. நாம் கிறிஸ்துவுக்குள்ளிருக்கும் நம்பிக்கையின் காரணமாக நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 61 க்கு இடையில் எழுதப்பட்டது.
ரோமாபுரியில் சிறைச்சாலையில் இருக்கும்போது பவுல் பிலிப்பியர் நிருபத்தை எழுதினார் (அப்போஸ்தலர் 28: 30). பிலிப்பியர் சபையிலிருந்து கிடைத்த நிதி உதவியுடன் ரோமில் இருந்த பவுலிடம் வந்த எப்பாப்பிரோதீத்துவிடம் பிலிப்பியருக்கு எழுதப்பட்ட கடிதம் கொடுக்கப்பட்டது. (பிலிப்பியர் 2: 25; 4: 18). ஆனால் ரோமிலிருந்த சமயத்தில் எப்பாப்பிரோதீத்து நோயுற்றார், அது அவருடைய பயணத்தைத் தாமதமாகி, கடிதத்தின் வழங்குவதை (2: 26-27) தாமதப்படுத்தியது.
யாருக்காக எழுதப்பட்டது
மக்கெதோனியா மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான பிலிப்பி நகரில் உள்ள கிறிஸ்தவ சபை.
எழுதப்பட்ட நோக்கம்
பவுல் தான் சிறைச்சாலையில் இருந்தபோது காரியங்கள் எப்படி இருந்தது என்பதையும் (1: 12-26), அவருடைய திட்டங்கள் என்னவாக இருந்தது மற்றும் அவருடைய விடுதலை ஆகியவற்றைக்குறித்து சபையானது அறியும்படி பவுல் விரும்பினார். (பிலி 2: 23-24). சபையில் சில குழப்பம் மற்றும் பிரிவு இருப்பதாகத் காணப்பட்டது, எனவே அப்போஸ்தலன், ஒற்றுமையை நோக்கிய ஒரு கண்ணோட்டத்தில் மனத்தாழ்மையை ஊக்குவிக்க எழுதுகிறார் (2: 1-18; 4: 2-3). போதக இறையியல் அறிஞரான பவுல், (3: 2-3) எதிர்மறையான கள்ள உபதேசங்களையும் மற்றும் சில குறிப்பிட்ட தவறான போதகர்களின் விளைவுகளைத் தலைகீழாக்குமாறு எழுதுகிறார். பவுல், எப்பாபிரோதீத்துவின் ஆரோக்கியத்தையும் திட்டங்களையும் பற்றி அறிக்கை கொடுக்க தீமோத்தேயுவை உற்சாகப்படுத்த எழுதினார் (2: 19-30) மற்றும் பவுல் தன்னைக் குறித்த சபையின் அக்கறைக்காகவும், அவர்கள் கொடுத்த நன்கொடைகள் (4: 10-20) ஆகியவற்றிற்காகவும் நன்றி தெரிவிக்க பவுல் எழுதினார்.
மையக் கருத்து
மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை
பொருளடக்கம்
1. வணக்கவுரை — 1:1, 2
2. பவுலின் சூழ்நிலை மற்றும் சபையை உற்சாகப்படுத்துதல் — 1:3-2:30
3. தவறான போதனைக்கு எதிரான எச்சரிக்கைகள் — 3:1-4:1
4. இறுதி அறிவுரைகள் — 4:2-9
5. நன்றி சொல்லுதல் — 4:10-20
6. இறுதி வாழ்த்துக்கள் — 4:21-23
அத்தியாயம் 1
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய பவுலும், தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரர்களுக்கும் எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நன்றிசொல்லுதலும் ஜெபமும்.
நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் எங்களோடு ஊழியத்தில் ஐக்கியப்பட்டிருப்பதால், நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் சந்தோஷத்தோடு ஜெபம்பண்ணி, உங்களில் நல்லசெயல்களைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்வரை நடத்திவருவார் என்று நம்பி, நான் உங்களை நினைக்கும்போதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். என் சிறைச்சாலையின் கட்டுகளிலும், நான் நற்செய்தியைப் போதித்து அதைத் உறுதிப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் வைத்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்கள் எல்லோரையும்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பினாலே உங்களெல்லோரையும் காண எவ்வளவோ ஆவலாக இருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி. மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும், 10 தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, 11 நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று நேர்மையானவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.
பவுலின் கட்டுகள்
12 சகோதரர்களே, எனக்கு சம்பவித்தவைகள் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவானது என்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன். 13 அரண்மனையில் உள்ளவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவிற்குள்ளான கட்டுகள் என்று தெரிந்து, 14 சகோதரர்களில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் தைரியம்கொண்டு பயம் இல்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாகத் துணிந்திருக்கிறார்கள். 15 சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்ல மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். 16 சிலர் என் கட்டுகளோடு உபத்திரவத்தையும் சேர்க்க நினைத்து, சுத்த மனதோடு கிறிஸ்துவை அறிவிக்காமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள். 17 நற்செய்திக்காக நான் உத்தரவுசொல்ல நியமிக்கப்பட்டவன் என்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள். 18 இதனால் என்ன? ஏமாற்றுவதினாலோ, உண்மையினாலோ, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இனிமேலும் சந்தோஷப்படுவேன். 19 அது உங்களுடைய வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியும் என்று அறிவேன். 20 நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடு ஜீவனாலாவது, மரணத்தினாலாவது, கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவார் என்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தகுந்ததாக அப்படி முடியும். 21 கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம். 22 ஆனாலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் செய்கைக்குப் பலன் கிடைத்திருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்று தெரியாது. 23 ஏனென்றால், இந்த இரண்டிற்கும் இடையே நான் நெருக்கப்படுகிறேன்; சரீரத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு, அது அதிக நன்மையாக இருக்கும்; 24 அப்படியிருந்தும், நான் சரீரத்தில் வாழ்ந்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம். 25 இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மீண்டும் உங்களிடம் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவிற்குள் பெருகுவதற்காக, 26 உங்களுடைய விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் சந்தோஷத்திற்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடும் இருப்பேன் என்று அறிந்திருக்கிறேன். 27 நான் வந்து உங்களைப் பார்த்தாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாக நின்று, ஒரே ஆத்துமாவினாலே நற்செய்தியின் விசுவாசத்திற்காகப் போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றுக்கும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எந்தவிதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள். 28 நீங்கள் பயப்படாமலிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அடையாளமாக இருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே. 29 ஏனென்றால், கிறிஸ்துவை விசுவாசிக்கிறதற்குமட்டும் இல்லை, அவருக்காகப் பாடுகள்படுகிறதற்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. 30 நீங்கள் என்னிடம் பார்த்ததும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.