அத்தியாயம் 6
உன் தேவனாகிய கர்த்தரிடம் அன்புசெலுத்து
“நீ உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம், நீயும் உன் மகனும், மகளும், நான் உனக்கு கொடுக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினால் உன் வாழ்நாட்கள் நீடித்திருப்பதற்கு, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்களுடைய தேவனாகிய யெகோவா கற்பித்த கற்பனைகளும், கட்டளைகளும், நியாயங்களும் இவைகளே. இஸ்ரவேலே, நீ நன்றாயிருப்பதற்கும், உன் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் பெருகுவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யக் கவனமாயிரு. “இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே யெகோவா. நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருப்பதாக. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குத் தெளிவாகப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி, அவைகளை உன் கைகளிலே அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாக இருப்பதாக. அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக. 10 “உன் தேவனாகிய யெகோவா, உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களாகிய உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்தில் உன்னை நுழையச்செய்யும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், 11 நீ நிரப்பாத சகல நல்ல பொருட்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் ஏற்கனவே வெட்டப்பட்டிருக்கிற கிணறுகளையும், நீ நடாத திராட்சைத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும், 12 நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படச்செய்த யெகோவாவை மறக்காதபடி எச்சரிக்கையாயிரு. 13 உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே வாக்குறுதி கொடுப்பாயாக. 14 உன் தேவனாகிய யெகோவாவுடைய கோபம் உன்மேல் ஏற்பட்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடி, உங்களைச் சுற்றிலும் இருக்கிற மக்களின் தெய்வங்களாகிய அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக. 15 உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய யெகோவா எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே. 16 “நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதீர்கள்*. 17 உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும், சாட்சிகளையும், கட்டளைகளையும் அக்கறையுடன் கைக்கொள்வீர்களாக. 18 நீ நன்றாயிருக்கிறதற்கும், யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த நல்ல தேசத்தில் நீ நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கும், 19 யெகோவா தாம் சொன்னபடி, உன் எதிரிகளையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ யெகோவாவுடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாக இருக்கிறதைச் செய்வாயாக. 20 நாளைக்கு உன் மகன்: “நம்முடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்ட இந்த சாட்சிகளும், கட்டளைகளும், நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்; 21 நீ உன் மகனை நோக்கி: நாங்கள் எகிப்திலே பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தோம்; யெகோவா பலத்த கையினாலே எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார். 22 யெகோவா எங்கள் கண்களுக்கு முன்பாக, எகிப்தின்மேலும் பார்வோன் மேலும் அவன் குடும்பம் அனைத்தின்மேலும் கொடிதான பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து, 23 தாம் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்திற்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுப்பதற்காக எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படச்செய்தார். 24 இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் யெகோவா நமக்குக் கட்டளையிட்டார். 25 நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யக் கவனமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.
* அத்தியாயம் 6:16 6:16 யாத். 17:1-7