கலாத்தியர்
ஆசிரியர்
அப்போஸ்தலனாகிய பவுல் இந்த நிருபத்தின் ஆசிரியர் ஆவார், ஆரம்பகால சபையின் ஒருமித்த கருத்தாக இது இருந்தது. ஆசியா மைனருக்கு தனது முதல் மிஷனரி பயணத்தின்போது அவைகளைத் தொடங்குவதற்கு உதவிசெய்த பிறகு, தெற்கு கலாத்தியாவிலுள்ள சபைகளுக்கு பவுல் எழுதினார். ரோமாபுரி அல்லது கொரிந்து போல கலாத்தியா ஒரு நகரம் அல்ல, மாறாக ரோம மாகாணத்தில் பல நகரங்களும் ஏராளமான சபைகளும் இருந்தன. கலாத்தியர் நிருபமானது யாருக்காக எழுதப்பட்டதோ அந்தக் கலாத்தியர்கள் பவுலினால் மனந்திரும்பியவர்கள் ஆவர்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி. 48 க்கு இடையில் எழுதப்பட்டது.
அனேகமாக பவுல், அந்தியோகியாவிலிருந்து கலாத்தியர் நிருபத்தை எழுதினார், ஏனெனில் இது அவருடைய சொந்த வீடுபோல இருந்தது.
யாருக்காக எழுதப்பட்டது
கலாத்தியர் நிருபம் கலாத்தியாவிலுள்ள சபைகளின் உறுப்பினர்களுக்கு எழுதப்பட்டது (கலா. 1: 1-2).
எழுதப்பட்ட நோக்கம்
யூத மார்க்கத்தமைந்தவர்களின் பொய் சுவிசேஷத்தை மறுப்பதே இந்த கடிதத்தின் நோக்கம், ஏனென்றால் விருத்தசேதனம் என்பது இரட்சிப்புக்கு இன்றியமையாதது என இந்த யூத கிறிஸ்தவர்கள் நினைத்தனர். அவர்களுடைய இரட்சிப்பின் உண்மையான அடித்தளத்தை கலாத்தியர்களுக்கு ஞாபகப்படுத்துவதும் இந்த நிருபத்தின் நோக்கமாகும். பவுல் தன்னுடைய அப்போஸ்தல அதிகாரத்தை தெளிவாக உறுதிப்படுத்தியதன் மூலம் பதிலளித்தார், அதோடு அவர் பிரசங்கித்த சுவிசேஷத்தை உறுதிப்படுத்தினார். கிருபையினால் விசுவாசத்தின் மூலம் மக்கள் நீதிமான்களாக்கப்படுகிறார்கள், விசுவாசத்தினால் மட்டுமே அவர்கள் ஆவிக்குரிய சுதந்திரத்தில் தங்கள் புதிய வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மையக் கருத்து
கிறிஸ்துவில் சுதந்திரம்
பொருளடக்கம்
1. அறிமுகம் — 1:1-10
2. நற்செய்தி அங்கீகாரம் — 1:11-2:21
3. விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்கப்படுதல் — 3:1-4:31
4. விசுவாசம் மற்றும் சுதந்திரத்தின் வாழ்க்கையை அப்பியாசப்படுத்துதல் — 3:1-4:31
அத்தியாயம் 1
மனிதர்களாலும் இல்லை, மனிதர்கள் மூலமாகவும் இல்லை, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின பிதாவாகிய தேவனாலும் அப்போஸ்தலனாக இருக்கிற பவுலாகிய நானும், என்னோடு இருக்கிற சகோதரர்கள் எல்லோரும், கலாத்தியா நாட்டில் உள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக; அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
வேறொரு நற்செய்தி இல்லை
உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாகவிட்டு, வேறொரு வித்தியாசமான நற்செய்திக்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு நற்செய்தி இல்லையே; சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற விரும்புகிறார்கள். நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைத்தவிர, நாங்களோ அல்லது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனோ, வேறொரு நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான். முன்பே சொன்னதுபோல மீண்டும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைத்தவிர வேறொரு நற்செய்தியை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான். 10 இப்பொழுது மனிதனுடையதா, தேவனுடையதா? யாருடைய அங்கீகாரத்தைத் தேடுகிறேன்? மனிதனைப் பிரியப்படுத்தப் பார்க்கிறேனா? நான் இன்னும் மனிதனைப் பிரியப்படுத்துகிறவனாக இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் இல்லையே.
பவுலின் நற்செய்தி தேவனுடையது
11 மேலும், சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி மனிதர்களுடைய யோசனையினால் உண்டானது இல்லையென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 12 நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, மனிதனிடமிருந்து கற்றதும் இல்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். 13 நான் யூதமதத்தில் இருந்தபோது என்னுடைய நடத்தையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் அதிகமாக துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி; 14 என் மக்களில் என் வயதுள்ள அநேகரைவிட யூதமதத்தில் தேறினவனாக, என் முற்பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக அதிக பக்திவைராக்கியம் உள்ளவனாக இருந்தேன். 15 அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், 16 தம்முடைய குமாரனை நான் யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியாக அறிவிப்பதற்கு, அவரை எனக்குள் வெளிப்படுத்த விருப்பமாக இருந்தபோது, உடனே நான் சரீரத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும்; 17 எனக்கு முன்பே எருசலேமில் அப்போஸ்தலர்களாக இருந்தவர்களிடம் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மீண்டும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன். 18 மூன்று வருடங்களுக்குப்பின்பு, பேதுருவைப் பார்ப்பதற்காக நான் எருசலேமுக்குப்போய், அவனோடுகூட பதினைந்து நாட்கள் தங்கியிருந்தேன். 19 கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத்தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் பார்க்கவில்லை. 20 நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய் இல்லை என்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாகச் சொல்லுகிறேன். 21 பின்பு, சீரியா சிலிசியா நாடுகளுக்குச் சென்றேன். 22 மேலும் யூதேயா நாட்டிலே கிறிஸ்துவிற்குள்ளான சபைமக்களுக்கு அறிமுகம் இல்லாதவனாக இருந்தேன். 23 முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கப்பார்த்த விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதைமட்டும் அவர்கள் கேள்விப்பட்டு, 24 எனக்காக தேவனை மகிமைப்படுத்தினார்கள்.