அத்தியாயம் 38
எசேக்கியாவின் வியாதி
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்தருவாயிலிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரணமடைவீர் என்று யெகோவா சொல்கிறார் என்றான். அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, யெகோவாவை நோக்கி: ஆ யெகோவாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாக நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்செய்து, எசேக்கியா மிகவும் அழுதான். அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான யெகோவாவுடைய வார்த்தையாவது: நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற யெகோவா சொல்கிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களுடன் பதினைந்து வருடங்கள் கூட்டுவேன். நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, இந்த நகரத்திற்கு ஆதரவாயிருப்பேன். இதோ, ஆகாசுடைய சூரியக்கடிகாரத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார். தாம் சொன்ன இந்த வார்த்தையின்படி யெகோவா செய்வார் என்பதற்கு இது கர்த்தரால் உனக்கு அடையாளமாயிருக்கும் என்று சொல் என்றார்; அப்படியே கடிகாரத்தில் இறங்கியிருந்த சூரியசாயை பத்துக்கோடுகள் திரும்பிற்று. யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, தன் வியாதி நீங்கி சுகமாமானபோது எழுதிவைத்ததாவது: 10 நான் என் பூரண ஆயுளின் வருடங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். 11 யெகோவாவை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை; இனி பூலோகக்குடிகளுடன் இருந்து மனிதர்களை நான் காண்பதில்லை. 12 என் ஆயுள் மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்து போகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையச்செய்வீர். 13 விடியற்காலம்வரை நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கத்தைப்போல என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையச்செய்வீர் என்று சொல்லி, 14 நாரையைப்போலவும், தகைவிலான் குருவியைப்போலவும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின; யெகோவாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்றேன். 15 நான் என்ன சொல்வேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப் பிரகாரமே செய்தார்; என் ஆயுளின் வருடங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன். 16 ஆண்டவரே, இவைகளினால் மனிதர்கள் பிழைக்கிறார்கள்; இவைகளெல்லாம் என் உயிர்க்கு உயிராயிருக்கிறது; என்னை சுகமடையவும் பிழைக்கவும்செய்தீர். 17 இதோ, சமாதானத்திற்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர். 18 பாதாளம் உம்மைத் துதிக்காது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. 19 நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான். 20 யெகோவா என்னை காப்பாற்ற வந்தார்; ஆகையால் எங்கள் உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான். 21 அத்திப்பழத்து அடையைக் கொண்டுவந்து, புண்ணின்மேல் பற்றுப்போடுங்கள்; அப்பொழுது பிழைப்பார் என்று ஏசாயா சொல்லியிருந்தான். 22 அப்பொழுது எசேக்கியா: நான் யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தான்.*
* அத்தியாயம் 38:22 38:22 21, 22, வசனங்கள் 6, 7, வசனங்கள் மத்தியில் சேர்த்து வாசிக்கப்பட வேண்டும்.