1 யோவான்
ஆசிரியர்
இந்த நிருபமானது ஆசிரியர் யார் என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால் திருச்சபையின் வலுவான, சீரான மற்றும் ஆரம்பகால சான்று, சீஷனாகவும் அப்போஸ்தலனாகவும் இருந்த யோவானை குறிப்பிடுகிறது (லூக்கா 6:13, 14). இந்த கடிதங்களில் யோவானின் பெயரைக் குறிப்பிடாதபோதிலும், அவர் ஆசிரியர் என்று அவரைக் குறிக்கும் மூன்று நிரூபணமான குறிப்புகள் உள்ளன. முதலாவதாக, இரண்டாவது நூற்றாண்டு எழுத்தாளர்கள் அவரை ஆசிரியர் எனக் குறிப்பிட்டனர். இரண்டாவதாக, யோவான் நற்செய்திக்கு ஒத்த வார்த்தைகளின் பயன்பாடு மற்றும் எழுத்து நடை இந்த நிருபங்களில் உள்ளன. மூன்றாவதாக, இயேசுவின் சரீரத்தை அவர் கண்டறிந்து, தொட்டார் என்று ஆசிரியர் எழுதினார், இது அப்போஸ்தலன் என்பதற்கான உண்மையாகும் (1 யோவான் 1:1-4; 4:14).
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 85-95 இடைப்பட்ட காலகட்டத்தில் எழுதப்பட்டது.
யோவான் தனது வயதான காலத்தில் பெரும்பாலான நேரத்தை செலவிட்ட எபேசுவில் அவருடைய வாழ்க்கையின் பிற்பகுதியில் யோவான் நிருபத்தை எழுதினார்.
யாருக்காக எழுதப்பட்டது
1 யோவானின் வாசகர்கள் யார் என்பது இந்தக் கடிதத்தில் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. எனினும், விசுவாசிகளுக்கு யோவான் எழுதியதாக உள்ளடக்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன (1 யோவான் 1:3-4; 2:12-14). இது பல இடங்களில் இருக்கும் பரிசுத்தவான்களுக்கு எழுதினார் என்பது சாத்தியம். பொதுவாக எல்லா இடங்களிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு, 2:1, “என் சிறு பிள்ளைகள்.”
எழுதப்பட்ட நோக்கம்
நாம் சந்தோஷத்தால் நிறைந்து, பாவத்திலிருந்து விலகும்படி ஐக்கியத்தை கொண்டுவருவதற்காகவும், இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொடுப்பதற்காகவும், விசுவாசிக்கு முழுமையான இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொடுப்பதற்காகவும், கிறிஸ்துவுடனான தனிப்பட்ட உறவை விசுவாசிக்குக் கொண்டுவருவதற்காகவும் யோவான் இந்த நிருபத்தை எழுதினார். சபையிலிருந்து பிரிந்து சென்றவர்களும், சுவிசேஷத்தின் உண்மையிலிருந்து விலகும்படி மக்களை வழிநடத்த விரும்புகிறவர்களுமான கள்ளப் போதகர்களின் காரியத்தை யோவான் குறிப்பாக கூறுகிறார்.
மையக் கருத்து
தேவனுடனான ஐக்கியம்
பொருளடக்கம்
1. அவதாரம் என்பதின் உண்மைத்துவம் — 1:1-4
2. ஐக்கியம் — 1:5-2:17
3. வஞ்சகத்தை அங்கீகரிப்பது — 2:18-27
4. தற்காலத்தின் பரிசுத்த வாழ்வுக்கான தூண்டுதல் — 2:28-3:10
5. உத்தரவாதம் அடிப்படையிலான அன்பு — 3:11-24
6. தவறான ஆவிகளை பகுத்தறிதல் — 4:1-6
7. பரிசுத்தமாகுதலின் முக்கியம் — 4:7-5:21
அத்தியாயம் 1
கிறிஸ்துவ அன்பின் பொருள்
ஆரம்பமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டும், எங்களுடைய கண்களினாலே கண்டதும், நாங்கள் ஏறெடுத்துப் பார்த்ததும், எங்களுடைய கைகளினாலே தொட்டதுமாக இருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். நீங்களும் எங்களோடு ஐக்கியம் உள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.
வெளிச்சத்தில் நடத்துதல்
தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது. நாம் அவரோடு ஐக்கியம் உள்ளவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாக இருந்தால், சத்தியத்தின்படி நடக்காமல் பொய் சொல்லுகிறவர்களாக இருப்போம். அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியம் உள்ளவர்களாக இருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறார். 10 நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இருக்காது.