அத்தியாயம் 44
சிலைவழிபாட்டினால் உண்டான பேரழிவு
எகிப்து தேசத்தில் குடியேறி, மிக்தோலிலும், தகபானேசிலும், நோப்பிலும், பத்ரோஸ் எல்லையிலும் குடியிருக்கிற எல்லா யூதரையுங்குறித்து, எரேமியாவுக்கு உண்டான வசனம்: இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நான் எருசலேமின்மேலும், யூதாவின் எல்லாப் பட்டணங்களின்மேலும், வரச்செய்த தீங்கையெல்லாம் நீங்கள் கண்டீர்கள். இதோ, அவர்களும் நீங்களும் உங்கள் முற்பிதாக்களும் அறியாத தெய்வங்களுக்குத் தூபங்காட்டவும், ஆராதனைசெய்யவும் போய், எனக்குக் கோபமூட்டுவதற்குச் செய்த அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம், அவைகள் இந்நாளில் பாழாய்க்கிடக்கிறது, அவைகளில் குடியில்லை. நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யாதிருங்களென்று, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரை அனுப்பி உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனாலும் அவர்கள் அந்நியதெய்வங்களுக்குத் தூபங்காட்டாமலிருக்க, என் சொல்லைக்கேளாமலும், பொல்லாப்பைவிட்டுத் திரும்புவதற்கு என் சொல்லைக் கவனிக்காமலும் போனார்கள். ஆகையால், என் கடுங்கோபமும் என் கோபமும் மூண்டு, யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் பற்றியெரிந்தது; அவைகள் இந்நாளில் இருக்கிறபடி வனாந்திரமும் பாழுமாய்ப்போனது. இப்போதும் இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் யூதாவில் ஒருவரையும் உங்களுக்கு மீதியாக வைக்காமல், உங்களில் ஆணையும் பெண்ணையும் பிள்ளையையும் பால்குடிக்கிற குழந்தையையும் வேரற்றுப்போகச் செய்வதற்கு, உங்கள் கைகளின் செயல்களால் எனக்குக் கோபமூட்டுகிற பெரிய பொல்லாப்பை உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாகச் செய்து, உங்களை நீங்களே அழித்துக்கொள்வதற்கும், நீங்கள் பூமியின் எல்லாத் தேசங்களுக்குள்ளும் சாபமும் நிந்தையுமாயிருப்பதற்காகவும், நீங்கள் தங்கியிருக்க வந்த எகிப்துதேசத்தில் அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டுவானேன்? யூதாதேசத்திலும் எருசலேமின் வீதிகளிலும் உங்கள் பிதாக்கள் செய்த பொல்லாப்புகளையும், யூதாவின் ராஜாக்கள் செய்த பொல்லாப்புகளையும், அவர்கள் பெண்கள் செய்த பொல்லாப்புகளையும், நீங்கள் செய்த பொல்லாப்புகளையும், உங்கள் பெண்கள் செய்த பொல்லாப்புகளையும் மறந்து போனீர்களோ? 10 அவர்கள் இந்நாள்வரை மனம் வருந்தினதுமில்லை, அவர்கள் பயப்படுகிறதுமில்லை; நான் உங்கள் முன்பாகவும் உங்கள் பிதாக்கள் முன்பாகவும் வைத்த என் வேதத்தின்படியும் என் கட்டளைகளின்படியும் நடக்கிறதுமில்லை. 11 ஆகையால், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உங்களுக்குத் தீங்குண்டாகவும், யூதா முழுவதையும் அழிக்குமளவுக்கு, என் முகத்தை உங்களுக்கு விரோதமாகத் திருப்பி, 12 எகிப்துதேசத்தில் வந்து தங்குவதற்கு தங்கள் முகங்களைத் திருப்பின மீதியான யூதரை வாரிக்கொள்ளுவேன்; அவர்கள் அனைவரும் எகிப்துதேசத்தில் அழிவார்கள்; அவர்கள் சிறியவன்முதல் பெரியவன்வரைக்கும், பட்டயத்திற்கு இரையாகி, பஞ்சத்தாலும் நிர்மூலமாவார்கள்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் இறந்து, சாபமும், பாழும் பழிப்பும், நிந்தையுமாவார்கள். 13 நான் எருசலேமைத் தண்டித்ததுபோல எகிப்துதேசத்தில் குடியிருக்கிறவர்களையும் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் தண்டிப்பேன். 14 எகிப்துதேசத்தில் தங்கவும், மறுபடியும் தங்கள் ஆத்துமா வாஞ்சித்திருக்கிற யூதா தேசத்தில் குடியேறுவதற்கு அங்கே திரும்பிப் போகவும்வேண்டுமென்று இங்கே வந்த மீதியான யூதரில் மீதியாயிருக்கிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை; தப்பிப்போகிறவர்களாகிய மற்றவர்களேயொழிய அவர்களில் ஒருவரும் அங்கே திரும்புவதில்லையென்றார் என்று சொன்னான். 15 அப்பொழுது தங்கள் பெண்கள் அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டினதாக அறிந்திருந்த எல்லா ஆண்களும், பெரிய கூட்டமாய் நின்றிருந்த எல்லாப் பெண்களும், எகிப்துதேசத்தில் பத்ரோசில் குடியிருந்த எல்லா மக்களும் எரேமியாவுக்கு மறுமொழியாக: 16 நீ யெகோவாவுடைய பெயரில் எங்களுக்குச் சொன்ன வார்த்தைகளின்படியே நாங்கள் உன் சொல்லைக் கேட்காமல், 17 எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராணிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை ஊற்றுவோம்; நாங்களும், எங்கள் முற்பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம். 18 நாங்கள் வானராணிக்கு தூபங்காட்டாமலும், அவளுக்குப் பானபலிகளை ஊற்றாமலும் போனதுமுதற்கொண்டு, எல்லாம் எங்களுக்குக் குறைவுபட்டது; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து போனோம். 19 மேலும் நாங்கள் வானராணிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை ஊற்றினபோது, நாங்கள் எங்கள் ஆண்களின் அனுமதியில்லாமல் அவளுக்குப் பணியாரங்களைச் சுட்டு, பானபலிகளை ஊற்றி, அவளை வணங்கினோமோ என்றார்கள். 20 அப்பொழுது எரேமியா, தனக்கு இப்படிப்பட்ட மறுமொழி கொடுத்த எல்லா மக்களாகிய ஆண் மற்றும் பெண்களையும் மற்ற அனைவரையும் நோக்கி: 21 யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும், நீங்களும் உங்கள் முற்பிதாக்களும், உங்கள் ராஜாக்களும், உங்கள் பிரபுக்களும், தேசத்தின் மக்களும் காட்டின தூபங்களை அல்லவோ யெகோவா நினைத்துத் தம்முடைய மனதில் வைத்துக்கொண்டார். 22 உங்கள் செயல்களின் பொல்லாப்பையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும், யெகோவா அப்புறம் பொறுத்திருக்க முடியாததினால் அல்லவோ, உங்கள் தேசம் இந்நாளில் இருக்கிறபடி குடியில்லாத வெட்டவெளியும் பாழும் சாபமுமானது. 23 நீங்கள் தூபங்காட்டி, யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்து, யெகோவாவுடைய சத்தத்தைக் கேட்காமலும், அவருடைய வேதத்திற்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அவருடைய சாட்சிகளுக்கும், இணங்கி நடக்காமலும் போனதினால் இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்குச் சம்பவித்தது என்றான். 24 பின்னும் எரேமியா எல்லா மக்களையும், எல்லாப் பெண்களையும் நோக்கி: எகிப்துதேசத்தில் இருக்கிற யூதராகிய நீங்கள் எல்லோரும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். 25 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், வானராணிக்குத் தூபங்காட்டவும், அவளுக்குப் பானபலிகளை ஊற்றவும், நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று, நீங்களும் உங்கள் பெண்களும், உங்கள் வாயினால் சொல்லி, உங்கள் கைகளினால் நிறைவேற்றினீர்கள்; நீங்கள் உங்கள் பொருத்தனைகளை உறுதிப்படுத்தினது உண்மையே, அவைகளைச் செலுத்தினதும் உண்மையே. 26 ஆகையால், எகிப்து தேசத்தில் குடியிருக்கிற யூதா மக்களாகிய நீங்கள் எல்லோரும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ, கர்த்தராகிய ஆண்டவருடைய உயிருள்ள வாக்கு என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூத மனிதன் வாயினாலும் இனி என் பெயர் வழங்கப்படுவதில்லையென்று நான் என் மகத்தான பெயரைக்கொண்டு ஆணையிடுகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார். 27 இதோ, நான் அவர்கள்மேல் நன்மைக்கு அல்ல தீமைக்கே எச்சரிக்கையாக இருப்பேன்; எகிப்து தேசத்திலிருக்கிற யூதா மனிதர்கள் எல்லோரும் ஒழிந்துபோகும்வரை பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிவார்கள். 28 ஆனாலும் பட்டயத்திற்குத் தப்புகிறவர்கள் எகிப்துதேசத்திலிருந்து யூதா தேசத்திற்குக் கொஞ்சம் பேராய்த் திரும்புவார்கள்; அப்படியே எகிப்துதேசத்தில் தங்கியிருக்க வந்த யூதாவில் மீதியான அனைவரும் அக்காலத்தில் தங்களுடைய வார்த்தையோ, என் வார்த்தையோ, யாருடைய வார்த்தை உண்மையாகும் என்று அறிவார்கள். 29 நான் இவ்விடத்தில் உங்களைத் தண்டிப்பேன் என்று உங்களுக்கு விரோதமாகச் சொன்ன என் வார்த்தைகள் உண்மையாகுமென்று நீங்கள் அறிவதற்கு உங்களுக்கு இதுவே அடையாளம் என்று யெகோவா சொல்லுகிறார். 30 இதோ, நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை, அவனுடைய எதிரியும் அவன் உயிரை வாங்கத் தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்ததுபோல, நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும், அவனுடைய எதிரிகளின் கையிலும், அவன் உயிரை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.