அத்தியாயம் 16
மனாசே மற்றும் எப்பிராயீமியர்களின் பங்கு
யோசேப்பின் கோத்திரத்தார்களுக்கு விழுந்த சீட்டினால் கிடைத்த பங்குவீதமாவது: எரிகோவின் அருகே இருக்கிற யோர்தானிலிருந்து, யோர்தானுக்குக் கிழக்கான நீரூற்றுக்குப் போய், எரிகோ துவங்கிப் பெத்தேலின் மலைகள்வரையுள்ள வனாந்திர வழியாகவும் சென்று, பெத்தேலிலிருந்து லூஸுக்குப் போய், அற்கியினுடைய எல்லையாகிய அதரோத்தைக் கடந்து, மேற்கே யப்லெத்தியர்களின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் கேசேர் என்னும் எல்லைகள்வரை இறங்கி, மத்திய தரைக் கடல் வரைக்கும் போய் முடியும். இதை யோசேப்பின் கோத்திரங்களாகிய மனாசேயும் எப்பிராயீமும் சுதந்தரித்தார்கள். எப்பிராயீம் கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்கினுடைய கிழக்கு எல்லை அதரோத் அதார் துவங்கி, மேலான பெத்தொரோன்வரை போகிறது. மேற்கு எல்லை மிக்மேத்தாத்திற்கு வடக்காகச் சென்று, கிழக்கே தானாத்சீலோவுக்குத் திரும்பி, அதை யநோகாவுக்குக் கிழக்காகக் கடந்து, யநோகாவிலிருந்து அதரோத்திற்கும் நகராத்திற்கும் இறங்கி, எரிகோவின் அருகே வந்து, யோர்தானுக்குச் செல்லும். தப்புவாவிலிருந்து மேற்கு எல்லை, கானா நதிக்குப் போய், மத்திய தரைக் கடலிலே முடியும்; இது எப்பிராயீம் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான பங்கு. பின்னும் எப்பிராயீம் கோத்திரத்தார்களுக்குப் பிரத்தியேகமாகக் கொடுக்கப்பட்ட பட்டணங்களும் அவைகளின் கிராமங்கள் எல்லாம் மனாசே கோத்திரத்தார்களுடைய பங்கின் நடுவில் இருக்கிறது. 10 அவர்கள் கேசேரிலே குடியிருந்த கானானியர்களைத் துரத்திவிடவில்லை; ஆகவே கானானியர்கள், இந்த நாள்வரை இருக்கிறபடி, எப்பிராயீமர்களுக்குள்ளே குடியிருந்து, கட்டாய வேலைக்காரர்களாக்கப்பட்டார்கள்.