அத்தியாயம் 12
யோவாஸ் தேவாலயத்தைப் பழுதுபார்த்தல்
யெகூவின் ஏழாம் வருட ஆட்சியில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருடங்கள் அரசாட்சி செய்தான்; பெயெர்செபா ஊரைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் சிபியாள். ஆசாரியனாகிய யோய்தா யோவாசுக்கு அறிவுரைசெய்த நாட்களெல்லாம் அவன் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். மேடைகளை மாத்திரம் அகற்றவில்லை; மக்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள். யோவாஸ் ஆசாரியர்களை நோக்கி: யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்படுகிற பிரதிஷ்டை செய்யப்பட்ட பொருட்களாகிய எல்லாப் பணத்தையும், மக்களின் வரிப்பணத்தையும், மீட்புக்காக மதிக்கப்படுகிற ஆட்களின் பணத்தையும், யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரும்படி அவரவர் தம்தம் மனதிலே நியமித்திருக்கும் எல்லாப் பணத்தையும், ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்களின் கையில் வாங்கிக்கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுது இருக்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான். ஆனாலும் ராஜாவாகிய யோவாசின் இருபத்துமூன்றாம் வருடம்வரை ஆசாரியர்கள் ஆலயத்தைப் பழுதுபார்க்காததால், ராஜாவாகிய யோவாஸ் ஆசாரியனாகிய யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் அழைப்பித்து: நீங்கள் ஆலயத்தை ஏன் பழுதுபார்க்கவில்லை? இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிலே பணத்தை வாங்காமல், அதை ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்காக விட்டுவிடுங்கள் என்றான். அப்பொழுது ஆசாரியர்கள் மக்களின் கையிலே பணத்தை வாங்கிக்கொள்ளாமலும், ஆலயத்தைப் பழுதுபார்க்காமலும் இருக்கிறதற்குச் சம்மதித்தார்கள். ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப் பலிபீடத்தின் அருகில் யெகோவாவுடைய ஆலயத்தில் மக்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான்; வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள். 10 பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று அவர்கள் காணும்போது, ராஜாவின் அதிகாரியும் பிரதான ஆசாரியனும் வந்து: யெகோவாவுடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி பைகளிலேபோட்டுக் கட்டி, 11 எண்ணின பணத்தைக் யெகோவாவுடைய ஆலயத்திலே கண்காணிப்பாளர்களின் கையிலே கொடுப்பார்கள்; அதை அவர்கள் யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிற தச்சருக்கும், சிற்பிகளுக்கும், 12 கொல்லருக்கும், கல்தச்சருக்கும், யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குத் தேவையான எல்லாச் செலவுக்கும் கொடுப்பார்கள். 13 யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக்கிண்ணங்களும், வாத்தியக்கருவிகளும், கலங்களும், எக்காளங்களும், பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் செய்யப்படாமல், 14 யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்காக வேலை செய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள். 15 வேலைசெய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படி, பணத்தைப் பெற்றுக்கொண்ட மனிதர்களின் கையிலே கணக்குக் கேட்காமலிருந்தார்கள்; அவர்கள் அதை உண்மையாகச் செய்தார்கள். 16 குற்றப்பிராயசித்தப் பணமும் பாவபிராயசித்தப் பணமும் யெகோவாவுடைய ஆலயத்திற்காகக் கொண்டுவரப்படவில்லை; அது ஆசாரியர்களைச் சேர்ந்தது. 17 அதற்குப் பின்பு சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் வந்து, காத்தூரின்மேல் போர்செய்து அதைப் பிடித்தான்; அதன் பின்பு எருசலேமுக்கு விரோதமாகப்போக ஆசகேல் தன் முகத்தைத் திருப்பினான். 18 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ், தன் முன்னோர்களாகிய யோசபாத், யோராம், அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்செய்துவைத்த எல்லாவற்றையும், தான் பரிசுத்தம் செய்துவைத்ததையும், யெகோவாவுடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனையிலுமுள்ள பொக்கிஷங்களில் கிடைத்த பொன் எல்லாவற்றையும் எடுத்து சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான்; அப்பொழுது அவன் எருசலேமைவிட்டுத் திரும்பிப்போனான். 19 யோவாசின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 20 யோவாசின் ஊழியக்காரர்கள் எழும்பி சதிசெய்து, சில்லாவுக்குப் போகிற வழியிலிருக்கிற மில்லோ வீட்டிலே அவனைக் கொன்றுபோட்டார்கள். 21 சிமியாதின் மகனாகிய யோசகார், சோமேரின் மகனாகிய யோசபாத் என்னும் அவனுடைய ஊழியக்காரர்கள் அவனைக் கொன்றார்கள்; இறந்துபோன அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய அமத்சியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.