அத்தியாயம் 3
தீர்க்கதரிசியின் மனவேதனையும் நம்பிக்கையும்
ஆண்டவருடைய கோபத்தின் பிரம்பினால் ஏற்பட்ட சிறுமையைக் கண்ட மனிதன் நான்.
அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல,
இருளிலே அழைத்து நடத்திவந்தார்.
அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே தினமும் திருப்பினார்.
என் சதையையும், என் தோலையும் கடினமாக்கினார்;
என் எலும்புகளை நொறுக்கினார்.
அவர் எனக்கு விரோதமாக மதிலைக்கட்டி,
கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டார்.
ஆரம்பகாலத்தில் இறந்தவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கச்செய்தார்.
நான் தப்பிப்போகாமலிருக்க என்னைச்சூழ வேலியடைத்தார்;
என் விலங்கை கடினமாக்கினார்.
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும்,
என் ஜெபத்திற்கு வழியை அடைத்துப்போட்டார்.
வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார்,
என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.
10 அவர் எனக்காகப் பதுங்கியிருக்கிற கரடியும்,
மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.
11 என்னுடைய வழிகளை அகற்றி, என்னைத் துண்டித்துப்போட்டார்;
என்னைப் பயனற்றவனாக்கிவிட்டார்.
12 தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.
13 தம்முடைய அம்புகளை வைக்கும் பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார்.
14 நான் என் மக்கள் அனைவருக்கும் பரியாசமும்,
தினமும் அவர்களுடைய கின்னரப் பாடலுமானேன்.
15 கசப்பினால் என்னை நிரப்பி,
எட்டியினால் என்னை வெறுப்படையச்செய்தார்.
16 அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி,
என்னைச் சாம்பலில் புரளச்செய்தார்.
17 என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்;
சுகத்தை மறந்தேன்.
18 என் பெலனும், நான் யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன்.
19 எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
20 என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது.
21 இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன்.
22 நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
23 அவைகள் காலைதோறும் புதியவைகள்;
உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
24 யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்;
ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.
25 தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் யெகோவா நல்லவர்.
26 யெகோவாவுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
27 தன் இளவயதில் நுகத்தைச் சுமக்கிறது மனிதனுக்கு நல்லது.
28 அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருப்பானாக.
29 நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாய் மண்ணில்படும்படி குப்புறவிழுவானாக.
30 தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக.
31 ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
32 அவர் வருத்தப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி மனமிரங்குவார்.
33 அவர் மனப்பூர்வமாக மனுமக்களைச் சிறுமையாக்கி வருத்தப்படுத்துகிறதில்லை.
34 ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் அனைவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,
35 உன்னதமான தேவனின் சமுகத்தில் மனிதர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,
36 மனிதனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?
37 ஆண்டவர் கட்டளையிடாமல் இருக்கும்போது,
காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
38 உன்னதமான தேவனுடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
39 உயிருள்ள மனிதன் முறையிடுவானேன்? அவன் தன்னுடைய பாவத்திற்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
40 நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, யெகோவாவிடத்தில் திரும்பக்கடவோம்.
41 நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுப்போமாக.
42 நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்;
ஆகையால் தேவரீர் மன்னிக்காமல் இருந்தீர்.
43 தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.
44 ஜெபம் உள்ளே நுழையமுடியாதபடி உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
45 மக்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.
46 எங்கள் பகைவர்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகத் தங்கள் வாயைத் திறந்தார்கள்.
47 பயமும், படுகுழியும், பயனற்றநிலையும், அழிவும் எங்களுக்கு நேரிட்டது.
48 மகளாகிய என் மக்கள் அடைந்த கேட்டினால் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.
49 யெகோவா பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை,
50 என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது.
51 என் பட்டணத்தின் பெண்கள் அனைவரினிமித்தம்,
என் கண் என் ஆத்துமாவுக்கு வேதனையுண்டாக்குகிறது.
52 காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள்.
53 படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லைவைத்தார்கள்.
54 தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன்.
55 மகா ஆழமான குழியிலிருந்து, யெகோவாவே,
உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன்.
56 என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.
57 நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் கேட்டு: பயப்படாதே என்றீர்.
58 ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்;
என் உயிரை மீட்டுக்கொண்டீர்.
59 யெகோவாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும்.
60 அவர்களுடைய எல்லா விரோதத்தையும்,
அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.
61 யெகோவாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும்,
அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும்,
62 எனக்கு விரோதமாக எழும்பினவர்களின் வாய்ச்சொற்களையும்,
அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாக யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
63 அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்;
நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
64 யெகோவாவே, அவர்களுடைய கைகள் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் கொடுப்பீர்.
65 அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர்,
உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.
66 கோபமாக அவர்களைப் பின்தொடர்ந்து,
யெகோவாவுடைய வானங்களின் கீழே அவர்கள் இல்லாதபடி அவர்களை அழித்துவிடுவீர்.