2 பேதுரு
ஆசிரியர்
1 பேது 1:1 ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 2 பேதுருவின் ஆசிரியர் அப்போஸ்தலனாகிய பேதுரு ஆவார். 2 பேதுரு 3:1 ல், 2 பேதுருவின் ஆசிரியர் இயேசுவின் மறுரூப நிலைக்கு சாட்சியாக இருப்பதாக கூறுகிறார் (1:16-18). ஒருநோக்கு சுவிசேஷ புத்தகங்கள் கூறுகிறபடி, பேதுரு, இயேசுவோடு இருந்த மூன்று சீடர்களில் ஒருவராக இருந்தார் (மற்ற இரண்டு பேரும் யாக்கோபும் யோவானும் ஆவர்). 2 பேதுருவின் ஆசிரியர், இரத்தசாட்சியாக மரிக்கவேண்டும் என்ற உண்மையை (1:14) அவர் குறிப்பிடுகிறார் என்பதையும்; யோவான் 21:18-19 ல் இயேசு, பேதுரு கைதியாகக் கட்டப்பட்டப்பின் இரத்தசாட்சியாக மரிப்பார் என்று முன்னறிந்தார்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 65-68 க்கு இடையில் எழுதப்பட்டது.
இதை அப்போஸ்தலன் தன் வாழ்நாளின் இறுதி வருடங்களில் ரோமிலிருந்து எழுதியிருக்கலாம்.
யாருக்காக எழுதப்பட்டது
முதல் பேதுருவைப் போலவே இது வடக்கு ஆசியா மைனரிலிருந்த அதே வாசகர்களுக்கு எழுதப்பட்டிருக்கலாம்.
எழுதப்பட்ட நோக்கம்
கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையை நினைவூட்டுவதற்காக (1:12-13, 16-21), விசுவாசத்தின் எதிர்கால தலைமுறையினரை அறிவுறுத்துவதற்காக (1:15) அதன் அப்போஸ்தல பாரம்பரியத்தை உறுதிப்படுத்துவதற்காக (1:13-14; 2:1-3) பேதுரு எழுதினார், தனது நாட்கள் குறுகியது என்று அவர் அறிந்ததினாலும், தேவ மக்கள் அநேக ஆபத்துக்களை சந்திக்கிறதினாலும் பேதுரு இதை எழுதினார். தேவனுடைய வருகையை மறுதலிக்கிற கள்ளப் போதகர்களின் வருகையைக் குறித்து தன்னுடைய வாசகர்களை எச்சரிக்கும்படி பேதுரு எழுதினார் (2:1-22) (3:3-4).
மையக் கருத்து
தவறான ஆசிரியர்களுக்கு எதிராக எச்சரிக்கை
பொருளடக்கம்
1. வாழ்த்துரை — 1:1, 2
2. கிறிஸ்தவ நல்லொழுக்கங்களில் வளர்ச்சியடைதல் — 1:3-11
3. பேதுருவின் செய்தி நோக்கம் — 1:12-21
4. தவறான ஆசிரியர்களுக்கு எதிராக எச்சரிக்கை — 2:1-22
5. கிறிஸ்துவின் வருகை — 3:1-16
6. முடிவுரை — 3:17, 18
அத்தியாயம் 1
நம்முடைய தேவனும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன்பேதுரு எழுதுகிறதாவது: தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிந்துகொள்கிற அறிவின்‌ மூலமாக உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகட்டும்.
தேவனுடைய அழைப்பும், தெரிந்துகொள்ளுதலும்
தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய எல்லாவற்றையும், அவருடைய தெய்வீக வல்லமையானது நமக்குத் தந்தருளினது மட்டுமல்லாமல், இச்சையினால் உலகத்தில் உள்ள தீமைக்குத் தப்பி, தெய்வீக சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாவதற்காக, அதிக மேன்மையும் அருமையான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படியிருக்க, நீங்கள் அதிக கவனம் உள்ளவர்களாக உங்களுடைய விசுவாசத்தோடு தைரியத்தையும், தைரியத்தோடு ஞானத்தையும், ஞானத்தோடு இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடு பொறுமையையும், பொறுமையோடு தேவபக்தியையும், தேவபக்தியோடு சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடு அன்பையும் காட்டுங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியில்லாதவர்களுமாக இருக்கமாட்டீர்கள். இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்னமே செய்த பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டது, என்பதை மறந்து தன் அருகில் உள்ளவைகளையும் காண இயலாதவனாகவும் குருடனாகவும் இருக்கிறான். 10 ஆகவே, சகோதரர்களே, உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்குவதற்கு எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபோதும் இடறிவிழுவதில்லை. 11 இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும்.
சத்தியத்தின் தீர்க்கதரிசனம்
12 இதினால், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை ஞாபகப்படுத்த எப்பொழுதும் நான் ஆயத்தமாக இருக்கிறேன். 13 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் மரித்துப்போவது சீக்கிரத்தில் நடக்கும் என்று அறிந்து, 14 நான் மரிக்கும்வரைக்கும் உங்களை ஞாபகப்படுத்தி எழுப்பிவிடுவது நியாயம் என்று நினைக்கிறேன். 15 மேலும், நான் மரித்ததற்குப்பின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்வதற்குரிய காரியங்களைச் செய்வேன். 16 நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக இல்லை, அவருடைய மகத்துவத்தைக் கண்களால் பார்த்தவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். 17 இவர் என்னுடைய நேசகுமாரன், இவர்மேல் பிரியமாக இருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, 18 அவரோடு நாங்கள் பரிசுத்த பர்வதத்தில் இருக்கும்போது, வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம். 19 அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்களுடைய இருதயங்களில் உதிக்கும்வரைக்கும் இருள் உள்ள இடத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அந்த வசனத்தைக் கவனித்திருப்பது நலமாக இருக்கும். 20 வேதத்தில் உள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் தீர்க்கதரிசியினுடைய சொந்த விளக்கமாக இருக்காது என்று நீங்கள் முதலில் அறியவேண்டும். 21 தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனிதர்களுடைய விருப்பத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியானவராலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.