அத்தியாயம் 12
ஞானியின் செயல்கள்
புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்;
கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.
நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்;
கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார்.
துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்;
நீதிமான்களுடைய வேரோ அசையாது.
குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்;
அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள்.
நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்;
துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள்.
துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது;
உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.
துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்;
நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.
தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்;
மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.
உணவில்லாதவனாக இருந்தும்,
தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட,
மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.
10 நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்;
துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே.
11 தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்;
வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.
12 துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்;
நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.
13 துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி;
நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான்.
14 அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்;
அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
15 மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்;
ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
16 மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்;
அவமானத்தை மூடுகிறவனோ விவேகி.
17 சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்;
பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
18 பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு;
ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து.
19 சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்;
பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்;
20 தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது;
சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம்.
21 நீதிமானுக்கு ஒரு கேடும் வராது;
துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள்.
22 பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்;
உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
23 விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்;
மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும்.
24 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்;
சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான்.
25 மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்;
நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
26 நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்;
துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.
27 சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை;
ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
28 நீதியின் பாதையில் வாழ்வு உண்டு;
அந்தப் பாதையில் மரணம் இல்லை.