அத்தியாயம் 17
விவேகத்தினால் வரும் நன்மை
சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட,
சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம்.
புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு,
சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான்.
வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்;
இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா.
தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்;
பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்;
ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்;
பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே.
மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது;
பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது.
லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்;
அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்;
கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.
10 மூடனை நூறடி அடிப்பதைவிட,
புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும்.
11 தீயவன் கலகத்தையே தேடுகிறான்;
கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
12 தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட,
குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல்.
13 நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ,
அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.
14 சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்;
ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு.
15 துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும்,
நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.
16 ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு?
அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.
17 நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்;
இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
18 புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான்.
19 விவாதப்பிரியன் பாவப்பிரியன்;
தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
20 மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை;
பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
21 மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்;
மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
22 மனமகிழ்ச்சி நல்ல மருந்து;
முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும்.
23 துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான்.
24 ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்;
மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும்.
25 மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும்,
தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
26 நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
27 அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்;
விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
28 பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்;
தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.