சங்கீதம் 101
தாவீதின் பாடல்.
இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்;
யெகோவாவே, உம்மை புகழ்ந்துபாடுவேன்.
உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்;
எப்பொழுது என்னிடத்தில் வருவீர்!
என்னுடைய வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.
தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்;
வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்;
அது என்னைப் பற்றாது.
மாறுபாடான மக்கள் என்னைவிட்டு விலகவேண்டும்;
பொல்லாதவனை ஏற்கமாட்டேன்.
பிறனை இரகசியமாக அவதூறுசெய்கிறவனை அழிப்பேன்;
பெருமைக் கண்ணனையும் திமிர்பிடித்த மனப்பான்மை உள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.
தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடு குடியிருக்கும்படி என்னுடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கும்;
உத்தமமான வழியில் நடக்கிறவன் எனக்கு ஊழியம்செய்வான்.
கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை;
பொய்சொல்லுகிறவன் என்னுடைய கண்முன் நிலைப்பதில்லை.
அக்கிரமக்காரர்கள் ஒருவரும் யெகோவாவுடைய நகரத்தில் இல்லாதபடி வேர் அறுக்கப்பட்டுபோக,
தேசத்திலுள்ள அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அதிகாலமே அழிப்பேன்.