சங்கீதம் 103
தாவீதின் பாடல்.
என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று;
என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைப் போற்று.
என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்;
அவர் செய்த எல்லா நன்மைகளையும் மறவாதே.
அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து,
உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி,
உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு,
உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்;
கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது.
ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார்.
யெகோவா உருக்கமும், இரக்கமும்,
நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை;
என்றைக்கும் கோபமாக இருப்பதில்லை.
10 அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும்,
நம்முடைய அக்கிரமங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
11 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ,
அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது.
12 மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ,
அவ்வளவு தூரமாக அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.
13 தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல,
யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
14 நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்;
நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
15 மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது;
வெளியின் பூவைப்போல் பூக்கிறான்.
16 காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது;
அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
17 யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும்,
அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் ஆதிகாலம் முதற்கொண்டு என்றென்றைக்கும் உள்ளது.
18 அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.
19 யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்;
அவருடைய ராஜரிகம் எல்லாவற்றையும் ஆளுகிறது.
20 யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு,
அவருடைய வசனத்தின்படி செய்கிற
பலத்த வல்லமையுள்ளவர்களாகிய அவருடைய தூதர்களே,
அவரைத் துதியுங்கள்.
21 யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்து,
அவர் பணிவிடைக்காரர்களாக இருக்கிற அவருடைய எல்லா சேனைகளே,
அவரைப் போற்றுங்கள்.
22 யெகோவா ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே,
அவரைப் போற்றுங்கள்;
என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று.