சங்கீதம் 108
தாவீது பாடிய பாடல்.
தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது;
நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்;
என்னுடைய மகிமையும் பாடும்.
வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்,
நான் அதிகாலையில் விழிப்பேன்.
யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;
தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும்,
உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது.
தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்;
உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக,
உமது வலதுகரத்தினால் இரட்சித்து,
எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும்.
தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார்,
ஆகையால் சந்தோஷப்படுவேன்;
சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது;
எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன்,
யூதா என்னுடைய செங்கோல்.
மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்;
ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்;
பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.
10 வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்?
ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
11 எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ?
எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ?
12 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்;
மனிதனுடைய உதவி வீண்.
13 தேவனாலே வெற்றி பெறுவோம்;
அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.