சங்கீதம் 11
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்;
பின்னை ஏன் நீங்கள் என்னுடைய ஆத்துமாவை நோக்கி,
பறவையைப்போல உன்னுடைய மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.
இதோ, துன்மார்க்கர்கள் வில்லை வளைத்து,
செம்மையான இருதயத்தார்கள்மேல் இருளில் எய்யும்படி தங்களுடைய அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
அஸ்திபாரங்களும் அழிந்துபோகின்றதே,
நீதிமான் என்ன செய்வான்?
யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்;
யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது;
அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன.
யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்;
துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.
துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்;
நெருப்பும், கந்தகமும்,
அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.
யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்;
அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.