சங்கீதம் 130
ஆரோகண பாடல்.
யெகோவாவே, உபத்திரவத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
ஆண்டவரே, என்னுடைய சத்தத்தைக் கேளும்;
என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்கு
உமது செவிகள் கவனித்திருக்கட்டும்.
யெகோவாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால்,
யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
யெகோவாவுக்குக் காத்திருக்கிறேன்; என்னுடைய ஆத்துமா காத்திருக்கிறது;
அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட
அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக;
கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
அவர் இஸ்ரவேலை அதின் எல்லா அக்கிரமங்களிலிருந்தும் மீட்டுக்கொள்வார்.