சங்கீதம் 138
தாவீதின் பாடல்.
உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்;
தெய்வங்களுக்கு முன்பாக உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து,
உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்;
உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்;
என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;
யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும்
உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால்,
அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள்.
யெகோவா உயர்ந்தவராக இருந்தும்,
தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்;
மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்;
என்னுடைய எதிரிகளின் கோபத்திற்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்;
உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.
யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்;
யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது;
உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும்.