சங்கீதம் 147
யெகோவாவை துதியுங்கள்;
நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது,
துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது.
யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்;
துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார்.
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்,
அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி,
அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்.
நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்;
அவருடைய அறிவு அளவில்லாதது.
யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்;
துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார்.
யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்;
நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.
அவர் வானத்தை மேகங்களால் மூடி,
பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி,
மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார்.
அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
10 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்;
வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார்.
11 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல்
யெகோவா பிரியமாக இருக்கிறார்.
12 எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்;
சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.
13 அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி,
உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
14 அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி,
செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
15 அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்;
அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது.
16 பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்;
சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
17 அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்;
அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
18 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்;
தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
19 யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும்,
இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
20 அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை;
அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள்.
அல்லேலூயா.