சங்கீதம் 149
அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும்.
இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும்,
மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும்.
அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து,
தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும்.
யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்;
சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு,
தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.
தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும்,
அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும்,
அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும்,
எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும்,
அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும்,
அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும்.
இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும்.
அல்லேலூயா.