சங்கீதம் 24
தாவீதின் பாடல்.
பூமியும் அதின் நிறைவும்,
உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் யெகோவாவுடையவை.
ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி,
அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார். யார் யெகோவாவுடைய மலையில்* ஏறுவான்?
யார் அவருடைய பரிசுத்த இடத்தில் பிரவேசிப்பான்?
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து,
தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும்,
பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே.
அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும்,
தன்னுடைய இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.
இதுவே அவரைத் தேடி விசாரித்து,
அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா)
வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;
நித்திய கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.
யார் இந்த மகிமையின் இராஜா?
அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள யெகோவா;
அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே.
வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;
நித்திய கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.
10 யார் இந்த மகிமையின் இராஜா?
அவர் சேனைகளின் யெகோவா;
அவரே மகிமையின் இராஜா (சேலா).
* சங்கீதம் 24:3 24:3 இந்த மலையின் மேல் தான் தேவாலயம் கட்டப்பட்டிருந்தது. சீயோன் மலையில் ஏறி ஆலயத்தில் பிரவேசித்தது ஆண்டவரை ஆராதிப்பதாகும் சங்கீதம் 24:3 24:3 நிலைநிற்பான்