சங்கீதம் 38
நினைவுகூருதலுக்கான தாவீதின் பாடல்.
யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்;
உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம்.
உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது;
உமது கை என்னைத் தாங்குகிறது.
உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை;
என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.
என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது,
அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது.
என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது;
என் உடலில் ஆரோக்கியம் இல்லை.
நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்;
என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.
ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது;
என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை.
10 என் உள்ளம் குழம்பி அலைகிறது;
என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது.
11 என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்;
என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
12 என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்;
எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி,
நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.
13 நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும்,
ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.
14 காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன்.
15 யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்;
என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர்.
16 அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்;
என்னுடைய கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே.
17 நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்;
என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
18 என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு,
என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன்.
19 என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்;
காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.
20 நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால்,
நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.
21 யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்;
என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்.
22 என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே,
எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.