சங்கீதம் 57
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்;
உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது;
பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன்.
எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.
என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது,
அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்: (சேலா).
தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.
என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது;
தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்;
அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது.
தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்;
உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்;
என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா)
என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது,
தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் பாடிப் புகழுவேன்.
என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்;
அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;
தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
10 உமது கிருபை வானம்வரையும்,
உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரையும் எட்டுகிறது.
11 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்;
உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.