சங்கீதம் 59
இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது.
என் தேவனே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்;
என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.
அக்கிரமக்காரர்களுக்கு என்னைத் தப்புவித்து,
இரத்தப்பிரியர்களான மனிதர்களுக்கு என்னை விலக்கிக் காப்பாற்றும்.
இதோ, என்னுடைய உயிருக்காக மறைந்திருக்கிறார்கள்;
யெகோவாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாமலிருந்தும்,
பலவான்கள் எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடுகிறார்கள்.
என்னிடத்தில் அக்கிரமம் இல்லாமலிருந்தும்,
ஓடித்திரிந்து போருக்கு ஆயத்தமாகிறார்கள்;
எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும்.
சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
இஸ்ரவேலின் தேவனே, நீர் எல்லா தேசங்களையும் தண்டிக்க விழித்தெழும்பும்;
வஞ்சகமாகத் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாமலிரும். (சேலா)
அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
இதோ, தங்களுடைய வார்த்தைகளைக் கக்குகிறார்கள்;
அவர்கள் உதடுகளில் வாள்கள் இருக்கிறது,
கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
ஆனாலும் யெகோவாவே,
நீர் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்;
அந்நியமக்கள் அனைவரையும் இகழுவீர்.
அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்;
தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.
10 என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்;
தேவன் என்னுடைய எதிரிகளுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
11 அவர்களைக் கொன்றுபோடாமலிரும், என்னுடைய மக்கள் மறந்துபோவார்களே;
எங்களுடைய கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து,
அவர்களைத் தாழ்த்திப்போடும்.
12 அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது;
அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினால்
தங்களுடைய பெருமையில் அகப்படுவார்களாக.
13 தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்படி,
அவர்களை உம்முடைய கடுங்கோபத்திலே அழித்துப்போடும்;
இனி இல்லாதபடிக்கு அவர்களை அழித்துப்போடும். (சேலா)
14 அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு,
ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
15 அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல்,
முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.
16 நானோ உம்முடைய வல்லமையைப் பாடி,
காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்;
எனக்கு நெருக்கமுண்டான நாளிலே
நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
17 என்னுடைய பெலனே, உம்மை பாடிப் புகழுவேன்;
தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும்,
கிருபையுள்ள என் தேவனுமாக இருக்கிறார்.