சங்கீதம் 97
யெகோவா ராஜரிகம்செய்கிறார்; பூமி பூரிப்பாகி,
திரளான தீவுகள் மகிழட்டும்.
மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது;
நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
நெருப்பு அவருக்கு முன்சென்று,
சுற்றிலும் இருக்கிற அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கிறது.
அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது;
பூமி அதைக்கண்டு அதிர்ந்தது.
யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது,
சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது.
வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது;
எல்லா மக்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
சிலைகளை வணங்கி,
விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக;
தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே,
உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள்.
யெகோவாவே, பூமி அனைத்திற்கும்
நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
10 யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்;
அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி,
துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
11 நீதிமானுக்காக வெளிச்சமும்,
செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.
12 நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து,
அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.