சகரியா
ஆசிரியர்
இதன் ஆசிரியர் இத்தோவின் மகனான பொகியாவின் குமாரனாகிய சகரியா என்று 1:1 ல் குறிப்பிடுகிறது. சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த ஆசாரிய குடும்பங்களில் இத்தோ ஒரு தலைவனாக இருந்தான் என்று நெகேமியா 12:4, 16 ல் குறிப்பிடுகிறது. எருசலேமுக்கு திரும்பி வந்தபோது சகரியா ஒரு பையனாக இருந்திருப்பான். குடும்ப வம்ச பிரகாரமாக இவன் ஆசாரியனாகவும் தேவ அழைப்பினால் ஒரு தீர்க்கதரிசியாகவும் இருந்தான். ஆலயத்தில் ஊழியம் செய்யாவிட்டாலும், யூதர்களின் ஆராதனை காரியங்களை நன்கு அறிந்தவனாக இருந்தான்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 520 க்கும் 480 கிமுக்கும். இடையில் எழுதப்பட்டது.
சிறையிருப்பிலிருந்து வந்த பிறகு எழுதப்பட்டது. 1-8 அதிகாரங்கள் ஆலயம் கட்டப்படுமுன் எழுதப்பட்டது. 9-14 அதிகாரங்கள் ஆலயம் கட்டப்பட்டப் பிறகு எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
எருசலேமில் வாழ்ந்த ஜனங்களுக்கும் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
மீதியானவர்களுக்கு, நம்பிக்கை தரவும், மேசியாவாகிய இயேசுவின் வருகைக்கும் எதிர்ப்பார்த்திருக்கவும் எழுதப்பட்டது. தேவன் தம் ஜனங்களை, தீர்க்கதரிசிகள் மூலமாக எச்சரிக்கவும், திருத்தவும் உபயோகித்துக் கொள்கிறார் ஆனால், ஜனங்கள் செவிகொடுக்கவில்லை அவர்களுடைய பாவம் தேவனுடைய தண்டனையை கொண்டுவந்தது. பொய் தீர்க்கத்தரிசனத்தைக் குறித்தும் எழுதியிருக்கிறது.
மையக் கருத்து
தேவனுடைய விடுதலை
பொருளடக்கம்
1 மனம்திரும்ப அழைத்தல் — 1:1-6
2 சகரியாவின் தரிசனங்கள் — 1:7-6:15
3 உபவாசத்தைக்குறித்த கேள்விகள் — 7:1-8:23
4 வருங்காலத்தைக் குறித்த பாரங்கள் — 9:1-14:21
அத்தியாயம் 1
மனம்திரும்ப அழைப்பு
தரியு*
அரசாண்ட இரண்டாம் வருடம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் மகனாகிய சகரியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வார்த்தை:
யெகோவா உங்கள் முன்னோர்களின்மேல் கடுங்கோபமாயிருந்தார். ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் யெகோவா உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். உங்கள் முன்னோர்களைப்போல் இருக்காதீர்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும், உங்கள் பொல்லாத செயல்களையும்விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடுக்காமலும் என்னைக் கவனிக்காமலும் போனார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். உங்கள் முன்னோர்கள் எங்கே? தீர்க்கதரிசிகள் என்றென்றைக்கும் உயிரோடிருப்பார்களோ? இல்லாமற்போனாலும், தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரர்களுக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் முன்னோர்களிடத்தில் பலிக்கவில்லையோ? எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் செயல்களின்படியாகவும் சேனைகளின் யெகோவா எங்களுக்குச் செய்ய தீர்மானித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து சொன்னதில்லையோ என்று சொல் என்றார்.
குதிரைகளைப்பற்றிய தரிசனம்
தரியு அரசாண்ட இரண்டாம் வருடம், சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்திநான்காம் தேதியிலே, யெகோவாவுடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் மகன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டானது; அவன் சொன்னது: இதோ, இன்று இரவிலே சிவப்புக்குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு மனிதனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும், மங்கின நிறமும், வெண்மையுமான குதிரைகள் இருந்தன. அப்பொழுது நான்: என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னுடன் பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார். 10 அப்பொழுது மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற அந்த மனிதன் மறுமொழியாக: இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கக் யெகோவா அனுப்பினவர்கள் என்றார். 11 பின்பு அவர்கள் மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற யெகோவாவுடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்தோம்; இதோ, பூமிமுழுவதும் அமைதலாக இருக்கிறது என்றார்கள். 12 அப்பொழுது யெகோவாவுடைய தூதன் மறுமொழியாக: சேனைகளின் யெகோவாவே, இந்த எழுபது வருடங்களாக நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எதுவரை இரங்காதிருப்பீர் என்று சொல்ல, 13 அப்பொழுது யெகோவா, என்னுடன் பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் மறுமொழியாகச் சொன்னார். 14 அப்பொழுது என்னுடன் பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் யெகோவா உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன். 15 நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் தீங்கை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாக வாழுகிற அன்னியமக்கள்மேல் நான் கடுங்கோபம்கொண்டேன். 16 ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று யெகோவா சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று கூறு என்றார். 17 இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் நிரம்பியிருக்கும்; இன்னும் யெகோவா சீயோனைத் தேற்றரவு செய்வார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்வார் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று மேலும் கூறு என்றார்.
கொம்புகளைப்பற்றிய தரிசனம்
18 நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, இதோ, நான்கு கொம்புகளைக் கண்டேன். 19 அவைகள் என்னவென்று என்னுடன் பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும், இஸ்ரவேலையும், எருசலேமையும் சிதறடித்த தேசங்கள் என்றார். 20 பின்பு யெகோவா எனக்கு நான்கு தொழிலாளிகளைக் காண்பித்தார். 21 இவர்கள் என்ன செய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கமுடியாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த தேசங்களுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.
* அத்தியாயம் 1:1 1:1தரியு, தரியு ஹிஸ்டாபேஸ், பெர்சிய ராஜ்ஜியத்தின் மேல் கிமு. 522 லிருந்து 486 கிமு. வரை அரசாண்டான். பெர்சிய மொழியில் அவன் பெயர் தாரா என்று அழைக்கப்பட்டது