1 கொரிந்தியர்
ஆசிரியர்
இந்த புத்தகத்தின் ஆசிரியர் பவுல் என ஏற்றுக்கொள்ளப்படுகிறார் (1 கொரிந்தியர். 1: 1-2; 16: 21) பவுலின் நிருபமும் எனவும் அழைக்கப்படுகிறது. சில சமயங்களில், எபேசுவில் பவுல் இருந்த சமயத்தில் அல்லது அதற்கு முன்பு, 1 கொரிந்தியர் (5: 10) க்கு முன்பு கடிதத்தை எழுதினார். கொரிந்தியர் கடிதத்தை தவறாகப் புரிந்து கொண்டார்கள், துரதிருஷ்டவசமாக அந்த கடிதம் இனி வெளியாகவில்லை. இந்த “முந்தைய கடிதத்தின்” உள்ளடக்கங்கள் (அது அழைக்கப்படுவது போலவே), முழுமையாக அறியப்படவில்லை, கொரிந்து சபையிலிருந்து பவுல் பெற்ற கடிதத்திற்கு பதில் கடிதமாக முதலாம் நிருபத்தை எழுதுகிறார், கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் நிருபத்திற்கு முன்பு பவுல் எழுதிய கடிதத்திற்கு கொரிந்தியர்கள் பதில் கடிதம் எழுதியிருக்கலாம்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
கிபி. 55 முதல் 56 வரையான காலப்பகுதியில் ஏறக்குறைய எழுதப்பட்டிருக்கலாம்.
இந்த நிருபம் எபேசுவிலிருந்து எழுதப்பட்டதாகும் (1 கொரி. 16: 8).
யாருக்காக எழுதப்பட்டது
கொரிந்தியருக்கான முதலாம் நிருபத்தின் உத்தேசிக்கப்பட்ட வாசகர்கள் கொரிந்துவிலிருந்த தேவனின் திருச்சபையின் உறுப்பினர்கள் ஆவர். (1 கொரிந்தியர் 1: 2). இருந்தபோதிலும் “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும், சகல இடங்களிலும்” (1: 2) என்று பவுல் தன்னுடைய நோக்கமுள்ள வாசகர்களாக அனைத்து வாசகர்களுக்கும் எழுதுகிறார்.
எழுதப்பட்ட நோக்கம்
கொரிந்து சபையின் தற்போதைய நிலைமையைப் பற்றி பவுல் பல ஆதாரங்களில் இருந்து தகவலைப் பெற்றுக்கொண்டார். இந்த கடிதத்தை எழுதுவதற்கான அவரது நோக்கம், திருச்சபையின் பலவீனமான பகுதியைக் கட்டியெழுப்புதல், அறிவுறுத்துதல், பிரிவினைகள் போன்ற தவறான பழக்கவழக்கங்களை சரிசெய்தல் ஆகியனவாகும், (1 கொரி. 1: 10-4: 21), தவறான போதனை (உயிர்த்தெழுதல் பற்றிய தவறான போதனை) ஆகியவற்றை செய்தல் ஆகும். (1 கொரிந்தியர். 15), ஒழுக்கக்கேடு (1 கொரி. 5, 6: 12-20), மற்றும் கர்த்தரின் இரா போஜனம் குற்றப்படுத்தப்படுதல் (1 கொரிந்தியர் 11: 17-34). கொரிந்திய தேவாலயம் வரங்கள் நிறைந்ததாக இருந்தது (1: 4-7) ஆனால் முதிர்ச்சியற்ற நிலை மற்றும் ஆவிக்குரியதல்லாததாக இருந்தது (3: 1-4) ஆகவே பவுல், சபைக்கு நடுவே காணப்படும் பாவப்பிரச்சனைகளை சபையானது எவ்விதம் கையாளவேண்டும் என்ற ஒரு முக்கியமான மாதிரியை வழங்கினார். சம்பந்தப்பட்ட பிரிவினைகள் மற்றும் அனைத்து விதமான ஒழுக்கக்கேடுகளுக்கும் ஒரு கண்டும் காணாமல் இருப்பதற்கு பதிலாக, அவர் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தார்.
மையக் கருத்து
விசுவாசியின் நடத்தை
பொருளடக்கம்
1. அறிமுகம் — 1:1-9
2. கொரிந்து சபையிலுள்ள பிரிவினைகள் — 1:10-4:21
3. ஒழுக்க மற்றும் நெறிமுறை ஆகியவற்றில் காணப்பட்ட ஒழுங்கின்மை — 5:1-6:20
4. திருமணத்திற்கான கோட்பாடுகள் — 7:1-40
5. அப்போஸ்தலர்களின் சுயாதீனம் — 8:1-11:1
6. ஆராதனை பற்றிய அறிவுரைகள் — 11:2-34
7. ஆவியின் வரங்கள் — 12:1-14:40
8. உயிர்த்தெழுதலைக் குறித்த உபதேசம் — 15:1-16:24
அத்தியாயம் 1
தேவனுடைய விருப்பத்தினாலே கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும், கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவிற்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகவும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாகவும் இருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் அவர்களுக்கும் ஆண்டவராக இருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நன்றிசெலுத்துதல்
கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே உறுதிப்படுத்தப்பட்டபடியே, நீங்கள் இயேசுகிறிஸ்துவிற்குள்ளாக எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், முழு நிறைவுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால், அவர் மூலமாக உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அப்படியே நீங்கள் எந்த ஒரு வரத்திலும் குறைவில்லாதவர்களாக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இறுதிவரைக்கும் அவர் உங்களை உறுதிப்படுத்துவார். தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாக இருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.
கொரிந்து சபையில் பிரிவினைகள்
10 சகோதரர்களே, நீங்களெல்லோரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகள் இல்லாமல் ஒரே மனதும் ஒரே யோசனையும் உள்ளவர்களாகச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 11 ஏனென்றால், என் சகோதரர்களே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது. 12 உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். 13 கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்? 14 என் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டேன் என்று ஒருவனும் சொல்லாதபடிக்கு, 15 நான் கிறிஸ்புவிற்கும் காயுவிற்கும்தவிர, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை; இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 16 ஸ்தேவானுடைய குடும்பத்தினருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் வேறு யாருக்காவது நான் ஞானஸ்நானம் கொடுத்தேனோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது. 17 ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாகப் போகாதபடிக்கு, மனித ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.
தேவபெலனும், தேவஞானமும்
18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாக இருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாக இருக்கிறது. 19 அந்தப்படி:
“ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து,
புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன்” என்று எழுதியிருக்கிறது.
20 ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? 21 எப்படியென்றால், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாமல் இருந்ததினால், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமானது. 22 யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்; 23 நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதர்களுக்கு இடறலாகவும் கிரேக்கர்களுக்குப் பைத்தியமாகவும் இருக்கிறார். 24 ஆனாலும் யூதர்களானாலும் கிரேக்கர்களானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாக இருக்கிறார். 25 இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் எனப்படுவது மனிதர்களுடைய ஞானத்திலும் அதிக ஞானமாக இருக்கிறது; தேவனுடைய பலவீனம் எனப்படுவது மனிதர்களுடைய பலத்திலும் அதிக பலமாக இருக்கிறது. 26 எப்படியென்றால், சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மனிதர் பார்வையில் ஞானிகள் அநேகர் இல்லை, வல்லவர்கள் அநேகர் இல்லை, பிரபுக்கள் அநேகர் இல்லை. 27 ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். 28 உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாக எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார். 29 மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். 30 அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவிற்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக, 31 அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.