2 நாளாகமம்
ஆசிரியர்
யூத பாரம்பரியம் எஸ்றா தான் இதன் ஆசிரியர் என்று உறுதிப்படுத்துகிறது. சாலோமோனின் அரசாட்சியோடு இந்த புத்தகம் தொடங்குகிறது. சாலோமோனின் மரணத்திற்கு பிறகு இராஜ்ஜியம் இரண்டாகப் பிரிந்து விட்டது. 2 நாளாகமம், எபிரேயர்களின் சரித்திரத்தை சாலொமோன் இராஜாவில் தொடங்கி பாபிலோனின் சிறையிருப்பு வரைக் காட்டுகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு. 450 க்கும் 425 க்கும். இடையில் எழுதப்பட்டது.
இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோன் சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு திரும்பி வந்தபின்பு எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
பண்டைக்காலத்து இஸ்ரவேலர்களுக்கும் வேதம் வாசிக்கிறவர்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
2 சாமுவேல் 2 இராஜாக்கள் புத்தகங்களில் சொல்லப்பட்டவைகளைத் தான் இந்த 2 நாளாகம புத்தகங்களும் கூறுகிறது. அந்தக் காலத்தில் ஆசாரியர்கள் மூலமாய் செய்யப்பட்ட காரியங்களுக்கு அதிக முக்கியத்தவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் இஸ்ரவேல் தேசத்தில் நடந்த பக்திக் காரியங்களை இந்த இரண்டு புத்தகங்களும் கணித்துக் காட்டுகிறது.
மையக் கருத்து
இஸ்ரவேலின் ஆவிக்குரிய பாரம்பரியங்கள்.
பொருளடக்கம்
1. சாலோமோனின் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் — 1:1-9:31
2. ரெகோபெயாமின் காலத்திலிருந்து உசியா இராஜாவின் காலம் வரை நடந்த நிகழ்ச்சிகள் — 10:1-28:37
3. எசேக்கியா இராஜாக் காலத்திலிருந்து யூத தேசம் சிறைப்பட்டு போகும் காலம் வரை நடந்த நிகழ்ச்சிகள் — 29:1-36:23
அத்தியாயம் 1
சாலொமோன் தேவனிடத்தில் ஞானத்தைக் கேட்டல்
தாவீதின் மகனாகிய சாலொமோன் தன் ராஜ்ஜியத்தில் பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடு இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார். சாலொமோன், இஸ்ரவேலில் உள்ள ஆயிரம்பேருக்கு அதிபதிகளோடும், நூறுபேருக்கு அதிபதிகளோடும், நியாயாதிபதிகளோடும், இஸ்ரவேல் எங்குமிருக்கிற வம்சங்களின் தலைவர்களாகிய அனைத்துப் பிரபுக்களோடும் பேசி, அவனும் அவனோடுகூட சபையார் அனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள். தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம்போட்டு ஆயத்தம்செய்த இடத்திற்குக் கீரியாத்யாரீமிலிருந்து அதைக் கொண்டுவந்தான்; யெகோவாவின் தாசனாகிய மோசே வனாந்திரத்திலே செய்த தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் அங்கே இருந்தது. ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் உண்டாக்கிய வெண்கலப் பலிபீடமும் அங்கே யெகோவாவின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள். அங்கே சாலொமோன் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் யெகோவாவின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி பலியிட்டான்.
அன்று இரவிலே தேவன் சாலொமோனுக்குக் காட்சியளித்து: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார். சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவனுடைய இடத்திலே ராஜாவாக்கினீர். இப்போதும் தேவனாகிய யெகோவாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக; தேவரீர் பூமியின் தூளைப்போன்ற ஏராளமான மக்களின்மேல் என்னை ராஜாவாக்கினீர். 10 இப்போதும் நான் இந்த மக்களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய மக்களை நியாயம் விசாரிக்கத் தகுதியுள்ளவன் யார் என்றான். 11 அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்ததாலும், நீ ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும், உன் எதிரிகளின் உயிரையும், நீடித்த ஆயுளையும் கேட்காமல், நான் உன்னை அரசாளச்செய்த என் மக்களை நியாயம் விசாரிப்பதற்கேற்ற ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டதாலும், 12 ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்கு முன்னும் பின்னும் இருந்த ராஜாக்களுக்கு இல்லாத ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார். 13 இப்படி சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டிற்குப் போய், ஆசரிப்புக்கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேலை ஆட்சிசெய்தான்.
14 சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரர்களையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தன; பனிரெண்டாயிரம் குதிரைவீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான். 15 ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான். 16 சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும், புடவைகளும் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டன; ராஜாவின் வியாபாரிகள் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள். 17 அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுகளுக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது வெள்ளிக்காசுகளுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியர்களின் அனைத்து ராஜாக்களுக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்டன.