எபேசியர்
ஆசிரியர்
எபேசியருக்கு எழுதப்பட்ட நிருபத்தின் ஆசிரியர் அப்போஸ்தலனாகிய பவுல் என்று எபேசியர் 1:1 கூறுகிறது. எபேசியர் நிருபமானது திருச்சபையின் ஆரம்ப நாட்களில் பவுல் எழுதியதாகக் கருதப்பட்டது, மேலும் அப்போஸ்தல பிதாக்கள்-ரோமாபுரியின் கிளெமென்ட், இக்னேசியஸ், ஹெர்மஸ் மற்றும் பாலிகார்ப் ஆகியோரால் மேற்கோள் காட்டப்பட்டது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 60 காலகட்டங்களில் எழுதப்பட்டது.
ரோம சிறையில் இருந்தபோது பவுல் அதை எழுதியிருக்கலாம்.
யாருக்காக எழுதப்பட்டது
முதன்மை பெறுநராக எபேசிய சபை இருந்தது. அவரது உத்தேசிக்கப்பட்ட வாசகர்கள் புறஜாதிகளே என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறார். எபேசியர் 2:11-13 ல், தன்னுடைய வாசகர்கள் “பிறப்பால் புறஜாதிகள்” (2:11) என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார், எனவே, யூதர்கள் “வாக்குத்தத்த உடன்படிக்கைகளுக்கு அந்நியர்களாக” (2:12) கருதுகிறார்கள். இதேபோல், எபிரெயர் 3:1 ல் பவுல் தன் உத்தேசிக்கப்பட்ட வாசகர்களிடம், “புறஜாதிகளாகிய உங்கள் நிமித்தம் தான் ஒரு கைதி” என்று கூறுகிறார்.
எழுதப்பட்ட நோக்கம்
கிறிஸ்துவின் முதிர்ச்சிக்கு ஒப்பாக முதிர்ச்சியடைய விரும்பும் அனைவருமே இந்த நிருபத்தைப் பெறுவார்கள் என்று பவுல் எண்ணினார். எபேசியரின் நிருபத்தில் தேவனுடைய உண்மையான பிள்ளைகளாக வளர தேவையான ஒழுக்கம் இருக்கிறது. மேலும், எபேசியர் நிருபத்தைக்குறித்த ஒரு ஆய்வு, ஒரு விசுவாசியை உறுதிப்படுத்த மற்றும் பாதுகாக்க உதவும், அதன்மூலம் அந்த நபர் தேவன் கொடுத்த அழைப்பு மற்றும் நோக்கத்தை நிறைவேற்ற முடியும். எபேசுவில் உள்ள விசுவாசிகளுக்கு திருச்சபையின் தன்மையையும் நோக்கத்தையும் விளக்குவதன் மூலம் கிறிஸ்தவ விசுவாசத்தில் அவர்கள் பலப்படுவதற்கு பவுல் நோக்கம் கொண்டிருந்தார். பவுல் எபேசிய நிருபத்தில் ஏராளமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார், முந்தைய மதங்களில் பயன்படுத்தப்பட்ட, தலை-உடல், முழுமை, இரகசியம், காலம், அதிபதி, முதலியவை அவருடைய புறஜாதி கிறிஸ்தவ வாசகர்களுக்கு தெரிந்திருக்கும். கிறிஸ்துவானவர், தெய்வங்கள் என்பவைகள் மற்றும் ஆவிக்குரிய உயிரினங்களுக்கும் மேலாக உயர்ந்தவராகவும் மேலானவராகவும் இருக்கிறார் என்பதை அவரது வாசகர்களிடம் நிரூபிக்க அவர் இந்த வார்த்தைகளை பயன்படுத்தினார்.
மையக் கருத்து
கிறிஸ்துவில் ஆசீர்வாதம்
பொருளடக்கம்
1. சரீரமான சபை அங்கத்தினர்களின் சத்தியங்கள் — 1:1-3:21
2. சரீரமான சபை அங்கத்தினர்களின் கடமைகள் — 4:1-6:24
அத்தியாயம் 1
தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவிற்குள் விசுவாசிகளாக இருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.
கிறிஸ்துவிற்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவிற்குள் உன்னதங்களிலே ஆவியானவருக்குரிய எல்லா ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். அவருக்கு முன்பாக நாம் எல்லோரும் பரிசுத்தம் உள்ளவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருப்பதற்கு, உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே கிறிஸ்துவிற்குள் அவர் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் அவர் நமக்கு அருளிய அவருடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, அவருடைய தயவுள்ள விருப்பத்தின்படியே, இயேசுகிறிஸ்துவின் மூலமாக அவருக்குச் சொந்த பிள்ளைகளாகும்படி நம்மை முன்குறித்திருக்கிறார். தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. அந்தக் கிருபையை அவர் எல்லா ஞானத்திலும் புத்தியிலும் எங்களுக்குள் பெருகப்பண்ணினார். காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் ஒழுங்கின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய எல்லாம் கிறிஸ்துவிற்குள்ளே ஒன்று சேர்க்கப்படவேண்டுமென்று, 10 தமக்குள்ளே தீர்மானித்திருந்த அவருடைய தயவுள்ள திட்டத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். 11 மேலும் கிறிஸ்துவின்மேல் முன்பு நம்பிக்கையாக இருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக இருப்பதற்காக, 12 அவருடைய விருப்பத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவிற்குள் அவருடைய உரிமைப்பங்காகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம். 13 நீங்களும் உங்களுடைய இரட்சிப்பின் நற்செய்தியாகிய சத்திய வசனத்தைக்கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். 14 அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய உரிமைப்பங்கின் உத்திரவாதமாக இருக்கிறார்.
நன்றிசெலுத்துதலும் ஜெபமும்
15 எனவே, கர்த்தராகிய இயேசுவின்மேல் உள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோர்மேலும் உள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நான் கேள்விப்பட்டு, 16 இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, 17 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், 18 அவர் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை என்னவென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற உரிமைப்பங்கினுடைய மகிமையின் ஐசுவரியம் என்னவென்றும்; 19 தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடம் காண்பிக்கும் அவருடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் என்னவென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். 20 எல்லா ஆளுகைக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இக்காலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திற்கும் பெயர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, 21 அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபக்கத்தில் உட்காரும்படிச் செய்து, 22 எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, 23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.