ஏசாயா
ஆசிரியர்
ஏசாயா புத்தகத்தின் பெயர், ஆசிரியர் ஏசாயா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் ஒரு தீர்க்கதரிசினியை மணந்தவர். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தன. (ஏசாயா 7:3; 8:3). ஏசாயா யூதா தேசத்தின் இராஜாக்களாகிய, உசியா, யோதாம், ஆகாஸ் எசேக்கியா என்பவர்களின் நாட்களில் தீர்க்கதரிசனம் உரைத்தவன். ஏசாயா 1:1; பொல்லாத இராஜவாகிய மனாசேயின் ஆட்சியில் மரணத்தை அடைந்ததாக கருதப்படுகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்:
ஏறக்குறைய கிமு 740 க்கும் 680 கிமுக்கும். இடையில் எழுதப்பட்டது.
உசியா இராஜாவின் கடைசி நாட்களிலிலும் யோதாம், ஆகாஸ் எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும் எழுதப்பட்டதாக எண்ணப்படுகிறது.
யாருக்காக எழுதப்பட்டது?
முதலாவதாக தேவனின் கட்டளைக்கு கீழ்படியாத யூத தேசத்தின் ஜனங்களுக்கும் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள்.
எழுதப்பட்ட நோக்கம்:
பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி விரிவான காரியங்கள் எழுதப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் வருகையின் நோக்கம் (ஏசாயா. 40:3-5), அவருடைய கன்னிப்பிறப்பு (7:14), அவர் நற்செய்தியை பிரசங்கித்தல் (61:1), அவருடைய பலியான மரணம் (52:13-53:12) தன் ஜனங்களை தம்மிடம் சேர்த்துக் கொள்ள திரும்ப வருதல். (60:2-3). ஆகியவைகளாகும். முக்கியமாக யூதா தேசத்தின் மக்களுக்கு தீர்க்கத்தரிசனம் சொல்ல அழைக்கப்பட்டவன். யூத தேசத்தில் எழுப்புதல்களும் கீழ்படியமைகளும் நடந்துக்கொண்டு இருந்தன. யூத தேசத்திற்கு அசீரிய தேசத்திலிருந்தும் எகிப்து தேசத்திலிருந்தும் அழிவுக்கான பயமுறுத்தல்கள் வந்துகொண்டிருந்ததது ஆனால் தேவனுடைய இரக்கத்தால் காக்கப்பட்டார்கள் ஏசாயா, பாவத்திலிருந்து மனம்திரும்பும் செய்திகளையும், வருங்காலத்தில் தேவனுடைய விடுதலைக்காக நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கும் செய்திகளையும் அறிவித்தான்.
மையக் கருத்து:
இரட்சிப்பு
பொருளடக்கம்:
1. யூத தேசத்திற்கு விரோதமான தீர்க்கதரிசனங்கள் — 1:1-12:6
2. பிற நாடுகளுக்கு விரோதமான தீர்க்கதரிசனங்கள் — 13:1-23:18
3. வருங்கால உபத்திரவங்கள் — 24:1-27:13
4. இஸ்ரவேல், யூத தேசங்களுக்கு விரோதமான தீர்க்கதரிசனங்கள் — 28:1-35:10
5. எசேக்கியா, ஏசாயாவின் சரித்திரம். — 36:1-38:22
6. பாபிலோனின் காரியங்கள் — 39:1-47:15
7. தேவ திட்டமான சமாதான அறிவிப்புகள். — 48:1-66:24
அத்தியாயம் 1
ஆமோத்சின் மகனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் ஆட்சியின் காலங்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி.
கலகக்கார தேசம்
வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; யெகோவா பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாகக் கலகம்செய்தார்கள். மாடு தன் எஜமானையும், கழுதை, தான் உணவு உண்ணும் இடத்தையும் அறியும்; இஸ்ரவேலர்களோ அறிவில்லாமலும், என் மக்கள் உணர்வில்லாமலும் இருக்கிறார்கள் என்கிறார். ஐயோ, பாவமுள்ள தேசமும், அக்கிரமத்தால் பாரம்சுமந்த மக்களும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற மக்களுமாக இருக்கிறார்கள்; யெகோவாவைவிட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள். இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமதிகமாக விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பெலவீனமாக இருக்கிறது. உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், பிளந்திருக்கிற காயமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது. உங்களுடைய தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக அழிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழான தேசம்போல் இருக்கிறது. மகளாகிய சீயோன், திராட்சைத்தோட்டத்திலுள்ள ஒரு குடிசையைப்போலவும், வெள்ளரித் தோட்டத்திலுள்ள ஒரு குடிசையைப்போலவும், முற்றுகை போடப்பட்ட ஒரு நகரத்தைப்போலவும் மீந்திருக்கிறாள். சேனைகளின் யெகோவா நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம். 10 சோதோமின் அதிபதிகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் மக்களே, நமது தேவனுடைய வேதத்திற்குச் செவிகொடுங்கள். 11 உங்களுடைய மிகுதியான பலிகள் எனக்கு எதற்கு என்று யெகோவா சொல்கிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் கொழுப்பும் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை. 12 நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்? 13 இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்துடன் அனுசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிப் பொறுத்துக்கொள்ளமாட்டேன். 14 உங்கள் மாதப்பிறப்புகளையும், பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து சோர்ந்துபோனேன். 15 நீங்கள் உங்கள் கைகளை விரித்து ஜெபித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் அதிகமாக ஜெபம்செய்தாலும் கேட்கமாட்டேன்; உங்கள் கைகள் குற்றமற்றவர்களின் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. 16 உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் செயல்களின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்வதைவிட்டு ஓயுங்கள்; 17 நன்மைசெய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். 18 வழக்காடுவோம் வாருங்கள் என்று யெகோவா சொல்கிறார்; உங்கள் பாவங்கள் அதிகச் சிவப்பாக இருந்தாலும் உறைந்த பனியைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். 19 நீங்கள் மனப்பூர்வமாகச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைச் சாப்பிடுவீர்கள். 20 மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களானால் பட்டயத்திற்கு இரையாவீர்கள்; யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று. 21 உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போனது! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிமக்கள் கொலைபாதகர்கள். 22 உன் வெள்ளி களிம்பானது; உன் திராட்சைரசம் தண்ணீர்க்கலப்பானது. 23 உன் பிரபுக்கள் முரடர்களாகவும், திருடர்களின் நண்பர்களுமாக இருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் லஞ்சத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரிப்பதில்லை; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை. 24 ஆகையால் சேனைகளின் யெகோவாவும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்கிறதாவது; ஓகோ, நான் என் எதிரிகளில் கோபம் தணிந்து, என் பகைவர்களை பழிவாங்குவேன். 25 நான் என் கையை உன் பக்கமாகத் திருப்பி, உன் கலப்படம் நீங்க உன்னைச் சுத்தமாகப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன். 26 உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரர்களை முதலில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர்பெறுவாய். 27 சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பிவருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள். 28 துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாக நொறுங்குண்டுபோவார்கள்; யெகோவாவை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள். 29 நீங்கள் விரும்பி தெரிந்துக்கொண்ட கர்வாலிமரங்களுடைய தோப்புகளுக்காக வெட்கப்படுவீர்கள்; * 1:29 மரங்களையும் தோப்புகளையும் வணங்கி வந்தார்கள் 30 இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப் போலவும், தண்ணீரில்லாத தோப்பைப்போலவும் இருப்பீர்கள். 31 பராக்கிரமசாலி சணல்குவியலும், அவன் செயல் அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அணைப்பாரில்லாமல் அனைத்தும் வெந்துபோகும் என்று சொல்கிறார்.

*அத்தியாயம் 1:29 1:29 மரங்களையும் தோப்புகளையும் வணங்கி வந்தார்கள்